வீரசக்கதேவி ஆலயக்குழு மு.துணைத்தலைவர் மறைவுக்கு இரங்கல்!
பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு முன்னாள் துணைத்தலைவரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவருமான திரு வீ.வீ.துரைராஜ் நாயக்கர் அவர்கள் நேற்று (04.12.2025) அதிகாலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழுவின் துணைத்தலைவராக இருந்தவர் சிங்கிலிபட்டியைச் சேர்ந்த துரைராஜ் நாயக்கர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அபிமானத்தைப்பெற்றவரான் துரைராஜ் நாயக்கர், விளாத்திக்குளம் பகுதியில் மதிமுக-வின் அடையாளமாக அறியப்பட்டவர். தவிர, வீரசக்கதேவி ஆலயக்குழுவில் துணைத்தலைவராக பொறுப்புவகித்த காலத்தில் அப்பகுதியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி சித்திரைத் திருவிழாவிற்கு ஜோதி கொண்டுசெல்வதை ஒருங்கிணைத்து பிரபலப்படுத்தியவர். வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருந்த துரைராஜ் நாயக்கர் நேற்று (04.12.2025) அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், பெரியவர் துரைராஜ் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி ஆலயப்பணிகளில் செய்திட்ட அரும்பணிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு ஆகியவை என்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.

