போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்றத் தலைவருக்கு வாழ்த்துகள்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பொம்முசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தீவிர ஆதரவாளரான பொம்முசாமி அவர்கள் 1996-இல் புதூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 1991-1996 வரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவராகவும் பொறுப்புவகித்தவர். இவர் கடந்த ஆண்டு இயற்கை எய்தியதைத் தொடர்ந்து சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பதவி காலியானது.
காலியாக இருந்த சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கான தேர்தல் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் பொழுது வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் முன்னாள் தலைவர் பொம்முசாமி அவர்களின் மூத்த மகன் எர்ரையா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து எர்ரையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எர்ரையா விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.