நீ விழிப்பாய் என்று காத்திருக்கும் நீதி! அடக்கம் செய்ய காத்திருக்கும் கூட்டம்!
தாமதப்படும் நீதி:-
10.5 விழுக்காடு வன்னியர் உள்ஒதுக்கீடுக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்று (10.08.2021) மாலை 4.30 மணியளவில் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி. சந்தீப் பானர்ஜி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. பள்ளி,கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் 115 சமூகங்களைச்சேர்ந்த மாணவ-மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதல் 115 சமூகங்களைச் சேர்ந்த "சமூகநீதி கூட்டமைப்பினர் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அரசு தரப்பு ஏற்கனவே பதில்மனு தாக்கல் செய்தநிலையில் இவ்விசாரணை முடிவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
கடந்தமுறை தலைமைநீதிபதியுடன் நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அமர்வுமுன் வந்த இந்தவழக்கு இன்று தலைமைநீதிபதியுடன் நீதிபதி ஆதிகேசவலு அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. ஆனால் வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு என்பதால் நீதிபதி.செந்தில் இராமமூர்த்தி மற்றும் நீதிபதி.ஆதிகேசவலு இருவரும் நீதிமன்ற மரபுப்படி தங்களை அந்தவழக்கிலிருந்து விடுவித்துக்கொண்டதாக பார்க்கப்படுகிறது. பொதுவாக நீதிமன்றங்களில் தான் அல்லது தங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளிலோ, தங்களிடம் பணியாற்றிய ஜூனியர்கள் நீதிபதிகளாக இருக்கும்பொழுதோ, நீதிபதிகள் அந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.
எப்படி இருப்பினும் பல லட்சம் மாணவ-மாணவியரின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்தவழக்கில் விசாரணை அமர்வுகள் அமைக்கும்பொழுதே நீதிபதியின் விருப்பத்தையும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்குமேயானால் நீதி தாமதமாவது தடுக்கப்பட்டிருக்கும் என்பதே சமூகநீதிக்கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கைகொண்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த 260 க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகள் தங்கள் மக்களை அமைதி வழிப்போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் மூலம் சட்டம் ஒழுங்கிற்கு பாதகமின்றி அமைதிவழியில் போராடி வருகின்றன. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அரசு தரப்பு இச்சட்டத்தால் பாதிப்பு இல்லை என்பதும், தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதும் பாதிக்கப்பட்ட மக்களை கொதிப்படையச் செய்தாலும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கைகொண்டு உயர்நீதிமன்றத்தை இச்சமூகங்கள் நாடியுள்ளதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கி, விரைவாக வழக்குவிசாரணையை முடித்து தீர்ப்பளிப்பது நீதிமன்றங்கள் மீதான சமானியனியனின் நம்பிக்கையை அதிகரிக்கும். இதைச்செய்யுமா நீதிமன்றங்கள்?
இதொருபுறமிருக்க, அரசு ஒரு சமுதாயத்திற்காக இத்தனை சமூகங்களை புறக்கணிக்க அல்லது கோரிக்கையை செவிமடுத்துக்கேட்கவில்லை என்பது ஏன் என்பதை இச்சமுதாய மக்களும், அமைப்புகளும் கவனித்தில் கொள்ளவேண்டும். அதற்கு ஒரே ஒரு ஒற்றைக்காரணம் இச்சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டின் தேவை, முக்கியத்துவம், அவசியம் குறித்து படித்தவர்களுக்கும் தெரியவில்லை, அமைப்புகளுக்கும் தெரியவில்லை என்பதே. இவர்கள் இடஒதுக்கீட்டிற்காக வாக்களிப்பதில்லை, இவ்வாக்குகளை விலைகொடுத்து வாங்கிட முடியும் என்ற நம்பிக்கையே. ஆகவே நாம் விழித்துக்கொண்டால் விடியல் உண்டு.