கவர்ன்மென்ட் மாப்பிள்ளையே தான் வேணுமா?.... அப்ப இதைச்செய்யுங்க முதல்ல!
தமிழகத்தில் அரசுப்பணிகளில் பல லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக அரசு கலியாக உள்ள அனைத்து துறைசார்ந்த அரசுப்பணியிடங்களும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகள் மூலமே நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அனைத்து பணியிடங்களிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவது உறுதியாகியுள்ளது. இது அரசுப்பணியில் சேர்வதற்க்கு தயாராகி வரும் மாணவர்களுக்கும், அரசுப்பணியில் சேர்வதையே லட்சியமாகக் கொண்டவர்களுக்கும் மகிழ்ச்சிக்குறிய செய்தி.
திமுக அரசு பொறுப்பேற்றுக்கொண்ட இந்த பத்துமாத ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வேகமாக குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆளும் திமுகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளபடியால் அதை நிறைவேற்ற சித்தமாக இருக்கிறது. இதன் மூலம் காலியாக உள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்களை தங்கள் ஆட்சி காலத்தில் நிரப்பி, இது மண்ணின் மைந்தர்களுக்கான ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்திக்காட்ட திராவிட முன்னேற்றக்கழக அரசு முனைப்போடு செயல்பட்டுவருகிறது.
இப்படியான சூழலில் இடஒதுக்கீடு விவகாரத்தில் சத்தமில்லாமல் சில காரியங்களை செய்திட குறிப்பிட்ட பிரிவினர் முயற்சி செய்து வருகின்றனர். அரசின் அனைத்துதுறையிலும் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து காலியாக உள்ள அரசுப்பணியிடங்களில் தங்கள் சாதியினரைக் கொண்டு நிரப்ப அனைத்து மட்டத்திலும் மிகப்பெரிய லாபியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்துள்ள நிலையில், அரசில் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் ஒரு அவசர சட்டத்தை கொண்டுவர தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இதற்கு ஆளும் கட்சியில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரே அரசுக்கும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பாலமாக உள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றம் நிராகரித்த இந்த சட்டத்தை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறைப்படுத்தாமல், அரசு நினைத்தால் இரண்டு வார காலத்திலேயே மீண்டும் நிறைவேற்ற முடியும் என்று குறுக்கு வழியில் மீண்டும் இச்சட்டத்தை நிறைவேற்றிட முயற்சித்து வருகின்றனர். இந்த குறுக்கு வழியை நீதிமன்றங்கள் மீண்டும் நிராகரிக்கும் என்றாலும் தற்காலிகமாக சில ஆண்டுகள் நீதிமன்றங்களில் இழுத்தடித்தாலே பெரும்பான்மையிலான அரசுப்பணியிடங்களை அபகரித்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி செயலாற்றி வருகின்றனர்.
இதை அறிந்துகொண்ட வன்னியர் அல்லாத சாதியினர் சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றிணைந்து மதுரையில் நேற்று மாபெரும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் பேசிய பலரும் அரசு ஒரு சாதிக்கு ஆதரவாக அரசு செயல்பட்டால் மிகப்பெரிய பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர்.
அரசுப்பணிக்கு ஆர்வமுடைய இளைஞர்களும், பெற்றோர்களும், அரசுப்பணியில் உள்ள மாப்பிள்ளையே தங்கள் மகளுக்கு வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு வரன் தேடுபவர்களும், அரசுப்பணியில் தங்கள் சாதிக்கான உரிமையை காத்திட இடஒதுக்கீடு குறித்த புரிதலை வலர்த்துக்கொண்டு, போராடுபவர்களுக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் இருக்க வேண்டும் என்று சமுதாய தலைவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.