கள்ளழகருக்கு ஓர் வைகை ஆறு - கற்றறிவோர்க்கு ஓர் கலைஞர் நூலகம்.
தமிழ் சங்கம் கண்ட மதுரையில் காண்போரும், கற்போரும் வியக்கும் வண்ணம் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
தூங்காநகரம் இனி அறிவுசார் நகரம் என போற்றப்படும்.
முத்தமிழ் வாழ்ந்த இடம் இனி புத்தகப் பூக்களின் சோலைவனம் ஆகிவிடும்.
முத்தமிழ் வளர்ந்த இடம் இனி முத்தமிழறிஞர் புகுந்த இடமாய் புகழப்படும்.
கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள்,மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டி தேர்வு மாணவர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அறிவைத்தேடி அலையும் அனைத்து தரப்பினரின் வேடந்தாங்கலாக அமைந்துள்ளது சிறப்புக்குரியது.
தமிழ், தமிழர் நலன் என தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து, தாய் தமிழகத்தை ஐந்துமுறை ஆட்சி செய்த முதல்வர் முத்தமிழறிஞரின் நூற்றாண்டில், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் பிறந்த இன்றையநாளை (15'ஜூலை) கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக்கொண்டாடிட உத்தரவிட்ட கலைஞரின் பெயர் தாங்கி "கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம்" அமைவது சாலப்பொருத்தம்.இமயம் முதல் குமரி வரை தமிழர்தம் கொடி நாட்டிய இரு துருவங்கள் வரலாற்றில் ஒன்றிணைக்கப்பட்ட நாள் இன்று.
திசை எங்கும் "திராவிட மாடல் ஆட்சி"யின் சங்கநாதம், ஆட்சியே போனாலும் அடிபணியமாட்டேன் என்று நக்கீரனின் குரலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இடி முழக்கம் எதிரிகளை பயங்கொள்ளச் செய்யும், எதிர்க்கட்சிகளை ஏக்கமடையச் செய்யும். இரும்புத்திரை நாட்டிற்கொரு ஜோசப் ஸ்டாலின் போல் இந்தியாவிற்கு மு.க.ஸ்டாலின் என்று உலகம் வியக்கும் உறுதியோடு, எதிர்நீச்சல் போட்டு இரண்டாண்டுகளாக தமிழகத்தை காத்துவரும் தளபதியின் பொற்கரங்களால், அரசியல், கலை, இலக்கியம், திரைப்படம், நாடகம், கவிதை, சொற்பொழிவு என அனைத்திலும் தானும் வெற்றி கண்டு, தமிழகத்தையும் தலைநிமிரச் செய்த கலைஞர் பெயரால் அமைந்துள்ள நூற்றாண்டுவிழா நூலகத்தை திறப்பது இயற்கை வகுத்த பாதை.
இனி மதுரைக்கு மல்லிகைப்பூக்களோடு புத்தகப்பூக்களும் பெருமை சேர்க்கும். கள்ளழகருக்கு ஓர் வைகை ஆறு! - கற்றறிவோர்க்கு ஓர் கலைஞர் நூலகம்!