மாறாத சமுதாயம் மறைந்துவிடும்! - காலம் கெட்டுவிட்டதென்று கூறலாமா?
மிககடுமையான விஷயங்களக்கூட சாமானிய எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவதில் வல்லவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா. மூடப்பழக்க வழக்கங்கள் புதர் மண்டிக்கிடந்த தமிழ் சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த பெருமகன். எவ்வளவு பெரிய விசயங்களை எவ்வளவு எளிமையாக கையால்கிறார் என்பதற்கு அவரின் இந்தப்பேச்சே உதாரணம்.
மாறாத சமுதாயம் மறைந்து விடும் !
மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்.
விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்க வேண்டும்.
ரயில் வண்டி கூடாது - கட்டை வண்டிதான் சிறந்தது.
தீப்பெட்டி தேவையில்லை - சிக்கிமுக்கி கல்தான் தேவை.
துப்பாக்கியா வேண்டாம் -வேலும் வில்லும் போதும்.
மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை.
ஆனால் காலம் கெட்டு விட்டது. பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை.
இப்படி பேசலாமா?
பேசுவது நாணயமா?
பென்சிலின் மருந்தின் பெருமையை பேச வேண்டிய இக்காலத்தில் "சஞ்சீவி பர்வதத்தின்" அருமையைப் பற்றி பேசலாமா?
அதற்கு பள்ளிக்கூடங்கள் ஏன்?
பஜனைக்கூடங்கள் போதுமே?
நீரீலே நெருப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், நீரோட்டத்தை இன்று மனித வாட்டத்தைக் குறைக்கும் சாதனமாக்கியுள்ளனர்.
மந்திரத்தின் துணை கொண்டல்ல.
மதியின் துணை கொண்டு.
தசரதன் வீட்டில் டெலிபோன் இருந்ததில்லை.
சீறிராமர் ரேடியோ கேட்டதில்லை.
சிபி சினிமா பார்த்ததில்லை.
ஆனால் நம் காலத்தில் இவை அத்தனையும் இருக்கின்றன.
ஆனாலும் சிலர் கூறுகின்றனர் - காலம் கெட்டுவிட்டதென்று கூறலாமா?
கடிகாரத்தைக் கவனித்து நடக்கின்ற மேனாட்டினர் முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கின்றனர்.
பஞ்சாங்கத்தைப் பார்த்து வாழுகிற நாம் பின்னேற்றத்தின் கடைக்கோடியில் இருக்கின்றோம்.
வேறெங்கே இருக்க முடியும்?
வைதீகத் தம்பி.
இங்கே வா!
விஞ்ஞானியின் அறிவு கண்டுபிடித்துக் கொடுத்த கிராமபோனிலே உள்ள பழைய பஜனைப்பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே?
மகிழலாமா?
யோசித்துப் பார்.
கோபப்படாதே!
உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும்.
மனித சமுதாயத்தின் அல்லலை,விஞ்ஞானம் எந்தளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு.
மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்தளவுக்கு குறைத்திருக்கிறது.
முன்னோர்கள் இவ்வழி சென்றனர். எனவே அடியேனும் அவ்வழியே என்று ஆராயாது சொல்வது விஷய விளக்கமல்ல, விவேகமுமல்ல, வாதமுறையும் ஆகாது.
அது கேவலம் மூடநம்பிக்கை.
காலம் மாறக்கூடியது.
மாறிக்கொண்டுதான் இருக்கும்.
காலத்திற்கேற்பக் கருத்தில் மாற்றம் வேண்டும்.
மாறாத சமுதாயம் மறைந்து விடும்.
- பேரறிஞர் அண்ணா