திமுக வெற்றிக்கு கைகொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள்!- பகுதி-1
பாஞ்சாலங்குறிச்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை மீண்டும் நிறுவி, வம்சாவளியினருக்கு குடியிருப்பு வசதி, பென்ஷன், நிலம் வழங்கியது தவிர, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 45-ஆண்டுகளாக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினையோ, பரம்பரை பரம்பரையாக கட்சியில் இருப்பவர்களுக்கு ஒன்றிய, மாவட்ட அளவிளான பொறுப்புகளையோ, வாரியத்தலைவர், டி.என்.பி.சி உறுப்பினர் போன்ற நிர்வாக அமைப்புகளில் எண்ணற்ற பதவிகள் இருந்தபொழுதும், அதை எதையும் இச்சமூகத்தினருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்பு வழங்காத போதிலும், நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தார் சமுதாயத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றிக்கு உதவியுள்ளனர் என்ற தகவல் அரசியல் வட்டாரத்திலும், அரசியல் விமர்சகர்கள் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் தொகுதிகளிலும் வலிமையான வேட்பாளர்களின் பின்னனியில் திமுக-விற்கு வாக்களித்தது தவிர, ஒட்டுமொத்த மக்களில் அதிமுக-விற்கு பெரும்பான்மையாக வாக்களிக்கும்போக்கே இருந்து வந்துள்ளது. ஆனால் இந்தமுறை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் வாக்களிக்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நடைபெற்றுள்ளதை, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகிறது.
பொதுவாக தொட்டிய நாயக்கர் சமுதாய அரசியல் பிரமுகர்கள், சாதி அரசியலுக்கும், கோஷ்டி அரசியலுக்கும் அப்பாற்பட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், நம்பிய உள்ளூர் தலைவர்களுக்கும் விசுவாசமிக்கவர்கள். உள்ளூர் கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாதது, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படாதது என பல்வேறு பிரச்சினைகள் சமுதாயத்தினர் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்தாலும், கட்சியிலுள்ள தலைவர்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் எப்போதும்போல் வழக்கமாக தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு தங்களது பங்களிப்பை செய்தனர். ஆனால் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதில் அதிமுக-அரசு காட்டிய அலட்சியமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு சாதிக்கு மட்டும் 10.50% இடஒதுக்கீடு வழங்கியதும், அரசியல் சாராத, படித்த பொதுஜன தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் வாக்களிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதைக் காணமுடிகிறது.
(இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்…)