மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! - மகளிர் தின வாழ்த்துகள்
உழைக்கும் மக்களின் கலகக்குரல் மேற்குலக நாடுகளில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத்தொடங்கி 19-ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்று புரட்சிகளுக்கு வித்திட்டது. இப்புரட்சிகளால் சமுதாயத்தில், ஆட்சி அமைப்புகளில், தொழில்துறையில் ஏற்பட்ட தாக்கம் இன்றைய ஜனநாயகத்துவத்திற்கும், நவீன அறிவியல் முன்னேற்றத்திற்கு வித்திட்டது என்றால் மிகையல்ல. காலம்காலமாக உழைக்கும் மக்களை சுரண்டிய அதிகார வர்க்கம், பெண்களின் உழைப்பை மட்டும் சுரண்டாமல், உடலையும் சுரண்டிவந்த கும்பலுக்கு எதிராக வெகுண்டெழுந்ததின் விளையின் அடையாளமே சர்வதேச மகளிர் தினம்.
இந்திய சமூகங்களில் பெண்களை தெய்வமாக வழிபடுவதாக கட்டமைக்கப்பட்டாலும், எதார்த்த வாழ்வில் அன்றை மேற்குலக நாடுகளில் நடைபெற்ற கொடுமைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களில் அடிமை விலங்கினை உடைத்தெரிந்து இருநூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், இங்கு இந்தநூற்றாண்டில் தான் முழுமையாக இல்லாவிட்டாலும்கூட ஒருபகுதியினராவது சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர்.
பெண்வழி சமூகமான கம்பளத்தாரிலும் முந்தைய தலைமுறைவரை பெண்கள் கிழட்டு சிங்கங்களின் காமவெறி தனிக்கும் போகப்பொருளாய், பலதார முறையால் பாழ்பட்டுக்கிடந்தனர் பெண்கள். இந்தியாவில் வேறெங்கும் தோன்றிடாத சமூகப் புரட்சியாளர்களால், சீர்திருத்த சிந்தனையாளர்களால் இருபதாம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட விதை, விவேகம் நிறைந்த வீரமங்கைகள் ஆழவேறூன்றி கம்பளத்தார் குடியிலும் ஓங்கி வளர்ந்துள்ளதை ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கிறோம். இந்தப்போக்கு தொடர வேண்டும், பகுத்தறிவுப் பாதையில் பெண்கள் மேலும் மேலும் வளரவேண்டும்.
கம்பளத்தார் சமுதாயத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை, சமுதாய வரலாற்றில் முதல்முறையாக "மகளிர் மாநாடு" நடத்தி 2020-ஆம் ஆண்டே உலகுக்கு உணர்த்தியது சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம். அந்த வகையில் தொடர்ந்து மகளிர் முன்னேற்றத்திற்கும், அவர்களை அடையாளப்படுத்துவதற்கும் என்றென்றும் துணைநிற்போம் என்று கூறி இந்த மகளிர் தினத்தில் "சாமானியப் பெண் தொடங்கி சரித்திர நாயகிகள் வரை" அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.