சிறப்புடன் நிறைவுபெற்றது சித்திரைத்தேர் விழா! இறுதிநாளில் பங்கேற்று பரிசளித்தார் தலைவர்!
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் சித்திரைத்தேர் விழா வெள்ளியன்று தொடங்கி சனிக்கிழமை இரவுடன் நிறைவுபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் விழா நடைபெறாத காரணத்தால் இந்தாண்டு முதல்நாளிலேயே மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கம்பளத்து சொந்தங்கள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இளைஞர்கள் பல இடங்களிலும் இருந்து ஜோதியை ஏந்தி வந்தனர்.
மிகுந்த பரபரப்பிற்கிடையே நடைபெற்ற இந்த விழாவில் எந்தவித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் சிறப்பான பாதுகாப்பினை காவல்துறை வழங்கியிருந்தது. முதல்நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இறுதிநாளான நேற்று சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்திப்பேசினார்.
அப்பொழுது, விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த ஆலயக்குழு நிர்வாகத்திற்கும், எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம்கொடுக்காமல் அமைதியான முறையில் வந்து அம்மனை தரிசித்துச்சென்ற பக்கதர்களுக்கும் நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.