பெருந்துறையில் கம்பளத்தார் பெருவெள்ளம்! கண்டுவியந்த தலைமை அதிகாரி!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள்விழா கடந்த 03.01.21-ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் பலபகுதிகளில் இந்த பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், ஈரோடு மாவட்ட சமுதாய மக்கள் ஒருபடி மேலே சென்று "தெறிக்க"விட்டனர் என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்திவரும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2-ஆம் தேதி மாலையே பெருந்துறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்ததிலிருந்து ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
பெருந்துறையில் தொடங்கிய இந்த பரபரப்பு அடுத்தநாள் மாவட்டமெங்கும் தொற்றிக்கொண்டது. சத்தியமங்கலம்,கவுந்தப்பாடி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட மாநில கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மாண்புமிகு கருப்பணன் ஆகியோர் கூடியிருந்த மக்கள் திரட்சியைப்பார்த்து மிகுந்த உற்சாகம் அடைந்தனர். சத்தியமங்கலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற வசனத்தைப் பேசி அசத்தினார்.
இப்படி மாவட்டமெங்கும் பிறந்தநாள்விழா அனல்பறக்க நடந்துகொண்டிருக்க, பெருந்துறையில், விடுதலைக்களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக அரசின் மு.தலைமைச்செயலாளர் திரு.ராமமோகன் ராவ் அவர்கள் வந்திறங்கியபொழுது மீண்டும் பெருந்துறையில் உற்சாகம் தொற்றிக்கொண்டது.கம்பளத்து இளைஞர்களின் தன்னெழுச்சியையும், அளிக்கப்பட்ட வரவேற்பையும் பார்த்து வியந்த திரு.ராமமோகன் ராவ் அவர்கள், அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட திரு.ராமமோகன்ராவ் அவர்கள், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நூற்றுக்கணக்கான கார்கள் புடைசூழ சாலைமார்க்கமாக திருப்பூர், பாரப்பாளையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்தவர், அங்குகூடியிருந்த கூட்டத்தினரிடையே உரையாற்றினார். அங்கும் பெருந்திரளான கூட்டம் அவரை உற்சாகத்துடன் வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த திரு.ராமமோகன்ராவ் நிகழ்ழ்சியை ஏற்பாடு செய்திருந்த விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.