நல்லா இருக்கனுமய்யா... நிவாரண நிதி பெற்ற பெண்கள் கண்ணீர் மல்க நன்றி!
சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கழக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஜூன்-3ஆம் தேதி முன்னாள் திமுக தலைவரும், மு. முதல்வருமான கலைஞர் பிறந்தநாளில் கொரோனா நிவாரணநிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துவார் என்று நினைத்திருந்த வேளையில், முதல்தவணையாக ரூ.2000 உடனடியாக வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தேர்தல் அறிக்கை வெளிவந்தபொழுது, தமிழகத்தின் கடன்சுமை 5.75 லட்சம் கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை பல ஆயிரம் கோடிகளாக இருக்கும் சூழலில், இதெல்லாம் வெற்று அறிவிப்புகள் என்று பலரும் எள்ளி நகையாடி வந்தனர். அதற்கு ஏற்றாற்போல் மீண்டும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால், ஆட்சிப்பொறுப்பேற்ற ஒருசில தினங்களே ஆன நிலையில் மீண்டும் ஒருபொதுமுடக்கத்தை அமல்படுத்தப்பட வேண்டிய இக்கட்டான சூழல். இருந்தபோதும் தனது அரசு எதையும் எதிர்கொள்ளும் என்ற நெஞ்சுரத்துடன் தமிழக முதல்வர் இந்த நிவாரணநிதியை அறிவித்துள்ளதாக தெரிவிக்கிறார் கோவை 100 டிவிசன் திமுக செயலாளர் ஈச்சனாரி திரு.மகாலிங்கம் அவர்கள்.
கொரோனா இரண்டாவது அலைக்கு மத்திய அரசோ அல்லது இந்தியாவில் மற்ற மாநில அரசுகளோ பெரிய அளவில் மக்களின் இன்னல்களை கண்டுகொள்ளாமல் கைவிரித்துவிட்ட நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் நிம்மதி பெரு மூச்சுவிடுவதாக தெரிவிக்கிறார்.
கோவை, ஈச்சனாரியில் ரூ.2000 நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பெண்கள் "கண்ணீர் மல்க " தமிழக முதல்வருக்கு நன்றி கூறிச்சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது பேசிய ஒரு மூதாட்டி, மதுக்கடைகளை மூடிவிட்டு இந்த நிவாரணநிதி வழங்குவது உண்மையிலேயே குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.
மேலும் இதுகுறித்து பேசியவர், தங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.மகாலிங்கம் ஏற்பாட்டில், நிவாரணநிதி உடனடியாக தேவைப்படும் முதியோர்கள், பெண்கள், ஏழை, எளியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பெற்றுத்தந்தது பெரும் ஆறுதலாக இருப்பதாக தெரிவித்தார்.