நெல்லூர் கோட்டையின் எல்லைசாமியை இழந்தோம்
ஆந்திர மாநிலம், நெல்லூரில் வசித்துவருபவர், இராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த திரு.கோட்டைச்சாமி.
சாதாரண இளம்வயது வாலிபனாக, பள்ளி கால படிப்பறிவோடு, சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் நெல்லூருக்கு பிழைப்புத்தேடி சென்ற திரு.கோட்டைச்சாமி அவர்கள், பிளாட்பார துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் மேனாக வாழ்க்கையைத் தொடங்கி, அதே பிளாட்பாரத்தில் சொந்த கடை தொடங்கி, படிப்படியாக வளர்ந்து பெரும் தொழிலதிபராக உருவெடுத்தவர்.
தானே வளர்ந்து, தனது குடும்பமே வாழ்ந்து, அனுபவித்துச் சென்றிருந்தால் *கோட்டைச்சாமி* அவர்களின் வாழ்க்கை காலவெளியில் காற்றோடு காற்றாக கரைந்து, மண்ணோடு மண்ணாக புதைந்து போயிருக்கும். ஆனால், வறண்டுபோன இராமநாதபுரத்து கந்தக பூமியில், வற்றாத பெருநதியாக கமுதி சுற்றுவட்டார பல்லாயிரம் இளைஞர்களை நெல்லூரை நோக்கி திசை திருப்பி வாழ்க்கை பயணத்தை வளமாக்கி கரை சேர்த்த பெருமகானார் என்பதே கம்பளத்தார் வரலாற்றில் மறக்கமுடியாத, காலத்தால் வெல்லமுடியாத அளவில் மக்கள் மனங்களில் கோட்டை கட்டி சிம்மாசனமிட்டுள்ளார் கோட்டைச்சாமி.
நெல்லூரை நாடி வந்தோரையெல்லாம் வாழவைத்தார், நன்கொடை கேட்டுச் சென்றோருக்கெல்லாம் வாரிக்கொடுத்தார். நெல்லூர் மண்ணின் எல்லைச்சாமியாக ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களை காக்கும் கோட்டைச்சாமியாக இருந்த நெல்லூர் மண்ணின் முடிசூடா மன்னன் கோட்டைச்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்று இன்று அதிகாலை வந்த செய்தி அவரை அறிந்த ஒவ்வொருவருக்கும் பேரிடியாய் அமைந்தது என்றால் மிகையல்ல.
எண்ணற்றோர் வாழ்க்கையில் விளக்கேற்றி மறைந்துள்ள கோட்டைச்சாமி அவர்களின் பேராதரவு சென்னை, வீ.க.பொ.இதாஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கும் இருந்தது பெரும் பாக்கியம். சமுதாயத்திற்கான தனது பணியும், பங்களிப்பும் காலம் கடந்தும் நீடிக்கவேண்டும் என்ற உறுதியோடு *பர்பிள் கிளப் நன்கொடையாளர்* பட்டியலில் இணைத்துக் கொண்டது வருங்கால தலைமுறையினர் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்துகிறது.
இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தனது அரும்பணியை தொடர்ந்திருக்க வேண்டியவரை காலன் பறித்துச்சென்றது நமக்கெல்லாம் பெரும் துயரம். அன்னாரின் எண்ணங்களையும், விருப்பத்தையும் நிறைவேற்றுவதே கோட்டைச்சாமி அவர்களின் ஆன்மாவிற்கு செய்யும் மரியாதை. அதை நிறைவேற்றிட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொடர்ந்து உழைத்திட உறுதியேற்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
வருத்தத்துடன், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.