🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சிறுதெய்வ வழிபாட்டின் வரலாறும் நாடுகடந்த தொடர்புகளும்!

இக்கட்டுரையில்,'சிறுவழிபாடுகள்' பற்றி,வட தமிழகம், தென் தமிழகம், இலங்கையில் மேற்கு.வடக்கு. கிழக்கு. மலையகம் உட்பட்ட பகுதிகளிலுள்ள சிறு தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் என்பன சொல்லப் படுகின்றன.அத்துடன், இங்கிலாந்தில் ஒருகாலத்திலிருந்த சிறு தெய்வ வழிபாடுகள் பற்றியும் ஒரு சில சிறு தகவல்களும் பதிவாகியிருக்கின்றன.

மானுடவியல் பார்வையில், சிறுதெய்வ வழிபாடுகள் என்பது, அந்தத் தெய்வங்களை வழிபடும் மக்களின் நம்பிக்கைகளின் பிரதி பலிப்புகளாகும் என்று சொல்லப் படுகிறது. அவை, மக்கள் வாழும் இடங்கள், மிருகங்கள், குன்றுகள், நதிகள், காலநிலை, மனித கைவேலைகள் போன்றவற்றில், தங்களைப் பாதுகாக்கும், 'கடவுள்த்' தன்மை இருக்கின்றன என்பதை அவர்கள் நம்புவதாகும். இவை அவர்களுக்குப் புரியாத இயல்நிலை அதாவது சுப்பர் நட்சுரல், அல்லது கடவுள்த் தன்மையிருப்பதாக நம்பி வழிபடுகிறார்கள். இதை மானுடவியலாய்வாளர்கள் 'அனிமிசம்' என்றழைப்பார்கள்.

இங்கிலாந்தில் மேற்கு ஐரோப்பாவில் இருந்த 'செல்டிக்' கலாச்சார நம்பிக்கை  சார்ந்த வழிபாட்டு முறை கி;மு.500-கி.பி.500வரையிருந்தது. இந்த வணக்கமுறை இயற்கையுடன் இணைந்த அவர்களின் நாளாந்த வாழ்க்கை முறையை ஒட்டியது. அவர்களின் கடவுளர்கள் 'தியோனிம்' என்றழைக்கப்பட்டார்கள். அதில் டெயுராட்டிஸ் ,(தலைவர்) டாரனிஸ் (இடி மின்னலுக்கான கடவுள்) லுகுஸ் என்று பல சிறு தெய்வங்கள் இருந்தார்கள்.

இங்கிலாந்துக்கு, யூலியஸ் சீசர்ஸ் தலைமையில் கி.மு.55ம் ஆண்டளவில் உரோமர் வரும் முன்னர், இங்கு 'ட்ருயிட்ஸ்;' என்பவர்களின் தலைமையில் (மஜிக்கோ-றிலிஜஸ்-ஸ்பெஸலிஸ்ட்-செல்டிக் சமயத்தின்; மேன்மையானவர்கள்) வழிபாட்டு முறையிருந்தது. அந்த வணக்கமுறை உரோமரால் சிதைக்கப் பட்டது. அதன் பின் கி.பி. 410ம் ஆண்டில் உரோமர் இங்கிலாந்திலிருந்து வெளியேறியதும். ஜேர்மன் நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆங்கிலோ ஸக்சன் என்ற ஆங்கிலம் பேசும் மக்களால், 'சிறு தெய்வங்கள்'; சார்ந்த வழிபாடுகள் இருந்ததாகச் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சரித்திர நிபுணர் காரோல் லூயிஸ் ஜொலி என்பவரின் 1996 ஆய்வின்படி, 'அன்றிருந்த மக்கள், மரங்கள், கற்கள், இடங்கள் போன்ற இயற்கை சக்திகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்' என்று சொல்கிறார். அக்கால கட்டத்தில் இலங்கை இந்தியத் தமிழ் மக்களிடையே இருக்கும் 'சாமியாடல்' - உருச் சொல்லல் போன்ற மாதிரியான, 'ஷாமனிஸ' சடங்குகள் நடந்த தடயமும் உண்டு. அந்தச் சடங்குகளுக்கே உரித்தான ஆடல் பாடல் என்பனவுமிருந்தன.

இந்த மக்கள் 'தோர்' என்ற ஜேர்மன பாரம்பரியத்தையுடைய கடவுளை வணங்கியதாகவம் இவரின் புனித அடையாளம் 'ஸ்வாதிஸ்கா'என்றும் கூறப்படுகிறது. இவர்; இடி,மின்னல்,காடுகள்,மரங்கள் போன்றவற்றின் கடவுளாக மதிக்கப்பட்டார். ஸ்வாதிகா என்ற அடையாளம் இந்து,ஜெயினம்,புத்தமதம் போன்றவற்றின் புனித குறியீடாகும் என்பது யாவரும் அறிந்ததே.

கால மாற்றத்தில்,இங்கிலாந்து முற்றுமுழுதாகக் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை முன்னெடுத்தது. பழங்கால நம்பிக்கைகள், சடங்குகள் என்பன,மாற்றப்பட்டன, (உதாரணம் நத்தார் பண்டிகை) அல்லது மறைந்தன.

ஆனால், சிறு தெய்வ வழிபாடுகளின் நீட்சி உலகின் பல இடங்களிலும் தொடர்கின்றன. இந்தியா இலங்கையில்,ஆதித் தமிழ்ப் பாரம்பரியத்துடன் வளர்கிறது. ஆதித் தமிழர்கள், இயற்கையை வணங்கியவர்கள். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை,குறிஞ்சி,முல்லை,மருதம்,பாலை,நெய்தல் என்று ஐந்தாகப் பிரித்து அந்த நிலங்களின் தெய்வங்களையும் உண்டாக்கி வணங்கியவர்கள்.

தமிழர்களின் வழிபாட்டு முறையில் வேதாக முறைகளுக்கப்பால் தொடரும் தனித்துவமான தெய்வ வழிபாடுகளும் சடங்குகளும் 'சிறு தெய்வ வழிபாடுகள'; என்று பார்க்கப் படுகின்றன .இக்கட்டுரையில் ஆய்வு செய்யப் பட்டிருக்கும் பல விடயங்கள், 'பெருதெய்வ வழிபாட்டில்' மட்டும், தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்குப் புதிய விடயமாகவிருக்கலாம்.

ஏனென்றால், பெரு தெய்வழிபாடு. ஒரு விதிமுறையைப் பின்பற்றி நடப்பதாகும், அவை புத்தகங்களில் எழுதப்பட்டதாகவிருக்கும்.

சிறு தெய்வ வழபாடு,மக்கள் தங்களைப் பல விதங்களிலுமிருந்தும் பாதுகாக்கும்,சிறு தெய்வங்களை வழிபடுவது. முன்னோர்களைக் குல தெய்வமாக வழிபடுவது. தங்களுக்காக இறந்தவர்களைப் போற்றுவதற்காக வழிபடுவது, என்று பல வகைப்படும்.

பெரும்பாலான, இந்தச் சிறு தெய்வங்களுக்குப் பெரு கோயிலகள் கிடையாது. அலங்கார வேலையுடனான கோபுரம் கிடையாது. சிறு தெய்வங்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களை வழிபடும் மக்களின் வாழ்வின் வளத்துடன் இணைந்தவர்கள். அதனால் இந்தத் தெய்வங்கள் மக்களின் அருகில் வழிபடப்படுகிறார்கள். இந்தத் தெய்வங்களை வழிபடும் வரலாற்றின் பல நுண்ணிய கருக்களை மானுடவியில் பார்வையில் இக்கட்டுரை ஆராய்கிறது.

இக்கட்டுரை சமய நெறிமுறைகள் பற்றியதல்ல, அதாவது, ஆபர்டீன் பல்கலைக்கழகத்தில், டாக்டர் சைமன் கோல்மான் என்பரால் அவரின் மானுடவியல் பட்டப்படிப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையில், சொல்வதுபோல், 'மானுடவியலாளர்கள், சமயம் பற்றிய உண்மை பொய்களை ஆய்பவர்கள் அல்லர். அவர்கள், உலக சமயக் கருத்துக்கள் எப்படி வெளிப்படுத்தப்படுகின்றன, அது சமூகக் கட்டமைப்பில் எப்படிப் பங்காற்றுகிறது என்று ஆய்வதாகும்' என்ற சொல்கிறார்.

தமிழ் நாட்டிலுள்ள சிறு தெய்வ வழிபாடு பற்றி,ஸ்டோனிய டாட்ரு பல்கலைகழகத்தைச்ர்ந்த, ஊலொ வால்க் (2007)ன்பவர் ஆய்வு செய்திருக்கிறார். அவரின் கருத்துப்படி,' வடதமிழகத்தின் கிராம தெய்வங்கள் பற்றிய ஆய்வு, 'அவர்களின் கதையாடல்கள், தொன்மங்கள், புராணங்கள், வாய்வழிபகிரப்படும் நாட்டுப்புற ஞாபங்கள், போன்றதாகத்தான் எண்ண முடியும்' என்கிறார். அத்துடன், கிராமத்தார், தங்கள் சிறு தெய்வங்கள் இரவில் நடமாடுவது, தங்களுக்கு வரும் ஆபத்து போன்றவற்றை மறைமுகமாகச் சொல்வது என்ற மக்களின் நம்பிக்கை பற்றியும் விபரிக்கிறார்.

உளவியல் ரீதியில் இதை விவரிப்தானால், மக்களின் மன உணர்வின் பிரதிபலிப்புதான் சமய நம்பிக்கைகள் என்று சொல்லப் படுகிறது. அந்த நம்பிக்கைகள் அவர்களின் வழிபாட்டின் செயற்படுகிறது எனலாம்..

எஸ்டோனியாவைச் சேர்ந்த ஊலொ வால்க், வட தமிழக்தில் உள்ள,அகரம், சாடைக்கட்டி, வெல்லாகுளம், கொடுபாடட்டு, ஆதிபாக்கம் (திருக்கோவிலுரூக்கு அண்மையில்), விருதுவிளங்கினன், கல்லேறி, பவித்திரன் (இவை,வில்லுபரம்,திருவண்ணமலைப் பக்கத்திலுள்ள) போன்ற கிராமங்களில் ஆய்வு செய்திருக்கிறார்.  இவர், உடையார், வன்னியர், ரெட்டியார் (இவர்கள் விவசாயிகள்) வெள்ளாளர்,முதலியார்,(நிலவுடமைக்காரர்கள்.செட்டியார், (கிணறு வெட்டுபவர்கள்), சக்கிலியர்(தோல் வேலை செய்பவர்கள்), கோனார் (ஆடு வளர்ப்பவர்கள்) அத்துடன் தலித் மக்கள் (கூலிவேலையாள்) என்போருடன் பேசிப்பழகி ஆய்வு செய்திருக்கிறார்.

பெரும்கடவுள்கள், சிறுகடவுள்கள் பற்றியும் அவர்களின் 'பணிகள்' பற்றி மக்களின் நம்பிக்கைகள், பயங்கள், எதிர்பார்ப்புகள் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார். அத்துடன் அங்கு வாழும் மக்களின், பாரம்பரிய கதைகள்,பாடல்கள்,தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகள், கட்டுமானங்கள்,சடங்குகள், ஐதீகங்கள் என்ற கருத்தாக்கங்கள் பற்றிப் பார்த்திருக்கிறார்.

அவரின் ஆய்வின் பார்வையில்,மிகவும் தனித்துவமான கிராமத்தக் கலைகளாக,தெருக்கூத்து,வில்லுப்பாட்டு,உடுக்கைப் பாட்டு மக்களின் வாழ்க்கையுடன் இணைந்திருக்கிறது.'ஒரு ஊரில்' என்று தொடங்கும் கிராமத்துக் கதைகள்pல் ஆவிகள்,பேய்கள் பற்றிய கதைகள்' உண்மையானவை'யாகச் சொல்லப் படுகிறது.பழைய வீhர்களின் கதை தனியாகச் சொல்லப்படுகிறது.கிராமத்து மக்களின் பார்வையில்@'அம்மன்;' முதன்மைப் படுத்தப் படுகிறாள்.

அவள் பல கடவுள்களையும் படைக்கிறாள்.அத்துடன்,சக்தி,காமாட்சி அம்மன்,திரௌபதி அம்மன்,காடயைம்மன்,பராசக்தி போன்ற அவதாரங்களையும் எடுக்கிறாள்.அத்துடன்,மாரியம்மன்,பேச்சியம்மன்,எல்லைப்பிடாரி,துர்கா,சாமுண்டியம்மா, காளி, என்ற பெயர்களுடனுமுள்ளாள்.ஆனால் அவள் எல்லாவற்றிற்கும் மேலான,ஈஸ்வரியாகும்.

அங்கிருக்கும் பூஜாரி, சொல்லும்போது:'இந்தஊரில்.முனிஸவரன்,அய்யனார்,மாரியம்மன்,முருகன் கோயிலிருக்கும்,ஆனால் படைக்கும் கடவுளான பிரம்மாவுக்குக் கோயில் கிடையாது. அந்தக் கடவுள் எங்கள் தலையெழுத்தை துன்பங்களாக எழுதுபவன்.அதனால் அவன் ஒரு கொலைகாரனாக மதிக்கப் படுகிறான்'என்கிறார்.

'இவ்வுலகின் ஆரம்பம் ஆதிபராசக்தியுடன் தொடங்குகிறது. அவள் பயங்கரமான தோற்றத்தையுடையவள். தனக்குத் துணையாகச் சிவனைப் படைத்தாள். ஆனால் சிலர் முனியைத்தான் (முனிஸ்வரன்) முதலிற் படைத்தாள் என்கிறார்கள். அய்யனார், மோகினியாக வடிவெடுத்த விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவராகும். இப்படிப் பல கதைகள் இந்தக் கிராமங்களில் உலவுகின்றன.

'ஒவ்வொரு கடவுளுக்கும் காவல் தெய்வமுண்டு. முருகனுக்குக் கடம்பன் காவற் தெய்வம். மாரியம்மனுக்குக் காத்தவராஜன்.பெரியாயிக்கு முனிஸ்வரன் என்று இருக்கிறது.'

சிறு தெய்வ வழிபாடுகளைத் தொடரும் பல இடங்களில் இப்படியான நம்பிக்கைகள் இருப்பது சாதாரணம். இந்தக் கிராமங்களில் தலித் சமுகத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவர், மாரியம்மன், வீரனார் கோயில்களில் பூசாரியாக இருக்கிறார். ஒரு கால கட்டத்தில், அந்தக் கிராமத்தில் தலித் மக்கள், கொடிய சிந்தனையுள்ளவர்களாகவும், சூனியம் செய்பவர்களாகவும், 'தூய்மையற்றவர்களாகக்' கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.

பெரு தெய்வங்களுக்குப் பூஜை செய்பவர்களாக காசி விஸ்வநாதக் குருக்கள் போன்ற பிராமணர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடவுள்களுக்கு நெருங்கியவர்களாகவும், ஜதிகமும், ஞானமும் தெரிந்தவர்களாகக் கணிக்கப் படுகிறார்கள்.

ஊலொ வல்க் என்பரால் எடுத்துக்காட்டப்பட்ட, மேற்காட்டிய விளக்கங்கள் வட தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டது.

தமிழகத்துக் காவல் தெய்வங்கள்: அய்யனார், மதுரைவீரன், கறுப்பண்ணசுவாமி (18 வகையான கறுப்பு.) சங்கிலிக்கறுப்பன், மாமத்தக்கறுப்பன், மண்டைக் கறுப்பன், முனியாண்டிக் கறுப்பன், சாமயக் கறுப்பு, சின்னக் கறுப்பு, பெரிய கறுப்பு, சோனகறுப்பு ). காட்டேறி-'காடேறி' அம்மன், (குருதி குடிப்பது) சுடலை மாறன், சுடலைமாறன் சுவாமி,-சுடலையைக் காப்பவன்), காளி அல்லது காளி அம்மன் (கொலரா நோய்க்குக் காரணி;), மாரி (சின்னம்மை, பொக்களிப்பான், அம்மன் நோய், மம்ஸ் - மிசில்ஸ், காரணி), எல்லையம்மன்-எல்லை மாரி. இது ஒரு எல்லைகல்.

அத்துடன் முத்தாரம்மன், முத்தாலம்மன், பேச்சி அம்மன், பாக்கியம்மன், பால்பழக்காரி அம்மன், போன்று பல தெய்வங்களின் வழிபாடுகள் உள்ளன.

நடுகல், நாட்டுக்கல், வீரக்கல்: மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களுக்காகப் பொறித்த கற்கள், இவர்களுக்கு நடக்கும் சடங்கில், மதுவும் உபயமாகக் கொடுக்கப்படும். இந்த வழிபாடு கால கட்டத்தில்' அய்யனார் வழிபாடாக மாறியது. அப்படியே மதுரைவீரன், (மதுரை), காத்தவராஜன், (தஞ்ஞாவூர்), அன்னமார் சுவாமிகள் (கோயம்புத்துர்;).

பழையனுர்; நீலி: கணவனால் வஞ்சகமாகக் கொல்லப்பட்ட பெண் அடுத்தபிறவி எடுத்துப் பழி தீர்த்துக்கொண்டது.

அடுத்தது, சாதிப் பிரச்சினை காரணமான காதல் முறிவால் இறந்த காதலர்கள்: அவர்களும் வணங்கப் படுகிறார்கள்.

சீலகிரி அம்மன், கண்ணகி அம்மன் வழிபாடுகள்: இந்தப் பெண் தெய்வங்கள் அவர்களின் அப்பழுக்கற்ற கற்புநிலை காரணமாக வழிபடப்படுகிறார்கள். கண்ணகியம்மனும், பேச்சியம்மனும் பெண்மையின் தூய்மையின் அடையாளமாக வணங்கப் படுகிறார்கள்.

கண்ணகிக்கும், கணவனுக்காக இறந்த பெண்களுக்கும் சித்ரா பௌர்ணமியில் விழா நடக்கும்.

வறுமையால் தனது குழந்தையுடனிறந்த 'நல்லதங்காளுக்காக' அப்படியான தவறைப் பெண்கள் செய்யக் கூடாது என்பதற்கான வழிபாடாகும்.

மக்களுக்கு வரும் தீமைகளை அகற்றும் காவற் தெய்வங்கள்: ஊரின் எல்லையிலிருப்பார்கள். அம்பு , வில், வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் காணப்படுவார்கள்.

விழாக்கள்: கார்த்திகை மாதத்தில் சொக்கப்பானை,கார்த்திகை தீபம் நடக்கும்.தை மாதத்தில்,தைபூசம்,மகர் ஜோதி அய்யப்பன் பூஜை நடக்கும்.

மாசி மாதம்,மாசி சிவராத்திரி பூஜை,அய்யனாரின் பிறந்த தினமாகக் கருதப்படும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்சவம்; வைகாசி விசாகம்;, ஆடியில்,ஆடி பெருக்கு, சுடலை மாறனுக்கு, மயான பூஜை சுடலையில் நடக்கும்.

தமிழ்நாட்டில் 'அங்கம்மா அல்லது அங்கலம்பா பூஜையும் நடுஇரவில் நடக்கும். அங்கலம்மா வழிபாடு, அத்துடன் பல தமிழநாட்டு சிறுவழிபாடுகள் ஆந்திரா, கன்னடா பிதேசங்களிலுமுண்டு. அங்காலம்மாவும் காளியும் ஒரே தெய்வமாக நினைக்கிறார்கள் . இந்தத் தெய்வம் மூன்று கடவுள்களையும் பெற்றவளாகக் கருதப்படுகிறாள்.

இலங்கையில் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக, இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆங்கில ஆட்சியில், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இவர்கள் கொண்டுவரப் பட்டார்கள்.

இவர்களின் சிறு தெய்வ வழிபாடுகள், இந்திய, இலங்கைத் தமிழ் மக்களிடையே இருப்பதுபோல் பெரும்பாலுமுள்ளது. இவர்கள், இலங்கைக்கு வந்த காலத்தில், ஆலைமரத்தினடியில் தங்களின் கடவுளைப் பிரதிபலிக்கும் 'வேல்'  'சூலம் போன்றவற்றை வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இவர்களும், மாரியம்மன், முருகன், வள்ளி, தெய்வயானை, பிள்ளையார், சிவா, பார்வதி, விஷ்ணு, லஷ்மி, சரஸ்வதி போன்றோரை வணங்குகிறார்கள்.

இவர்களிடையே 1820ம் ஆண்டு மாரியம்மன் வழிபாடு ஆரம்பித்தது.1852ல் மாத்தலை என்ற இடத்தில் சிறி முத்துமாரியம்மன் கோயில் கட்டப்பட்டது.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால், முருகன் வழிபாட்டுக்காக, மாத்தலையில் கதிரேசன்  கோயில் கட்டியிருக்கிறார்கள். இலங்கையின் புத்தமதம் மட்டுமல்லாமல் அத்தனை மக்களும் வழிபடும் கதிர்காம யாத்திரை பக்தியுடன் மலையகத்திலிருந்த தொடரும். ஆடித்திருவிழா பிரமாதமாக நடக்கும்.

மலையகத் தமிழர்கள், ஒவ்வொரு சாதியினரும் தங்களின் சிறு தெய்வங்களைத் தங்களைக் காக்கும் கடவுள் அல்லது முக்கிய தெய்வமாக வணங்குகிறார்கள்.

கள்ளர்கள் என்ற சாதியைச் சேர்ந்தவர்கள், நல்லநான் பெருமாள்பிள்ளை என்ற கடவுளை வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டில் பலியிடுதலும் நடக்கும். மலையகத் தமிழ் மக்களால், மாடசாமி, முனியாண்டி, காளி, மதுரைவீரன், சங்கிலிக் கறுப்பன், வால்ராஜர், வைரவர், வீரபத்திரன், சுடலை மாறன், றோடா முனி போன்றவர்கள் வழிபடப்படுகிறார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில்,104 கோயில்கள் உள்ளன.153 கோயில்கள் கண்டி மாவட்டத்திலும், 62 கோயில்கள் மாத்தலை மாவட்டத்திலும் 2001ம் ஆண்டு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

மலையகத் தமிழரின் சமயத்தை வளர்க்க 'அறநெறிப் பாடசாலைகள்' பணிபுரிகின்றன. இதில், நுவரலியாவில் 22 கோயில்களும்,கண்டியில்54 கோயில்களும்,மாத்தலையில்11 கோயில்களுமுள்ளன.

சிறு தெய்வ வழிபாடு பற்றிய ஆய்வில், பெரும்பாலான சிறுதெய்வங்கள் வழிபாடு வர்ணாஷ்ரம முறையில ஒதுக்கிவைக்கப்பட்ட தமிழ் மக்களால் 'பெருதெய்வ' வழிபாடு நடக்கும் வளமான பகுதிளைத் தாண்டித் தொடர்கிறது என்பது வரலாறு. அந்தச் சிறுதெய்வ' வழிபாடுகள் பெரும்பாலும் மிக நீண்டகால வழிபட்டு வரலாற்றைக் கொண்டது.

குறிப்பிட்ட சில சிறு தெய்வ வழிபாடுகள், உயர் குடி என்பராலும் அவர்களால் சாதி என்ற பெயரில் ஒதுக்கப் பட்டு வைத்திருப்பவர்களாலும் வெவ்வேறு முறையில் வணங்கப்படுவதையும் இந்த ஆய்வு சொல்கிறது.

'நேட்சர்- அதாவது 'இயற்கை' என்ற பத்திரிகையில், திரு.,பில் பால்; என்பவர் (2015 எழுதிய கொம்லெக்ஷ் சொசையட்டிஸ் எவோவ்ல்ட் விதவுட் பிலிவ் இன் ஆல்-பவர்புல் டெயட்டி' அதாவது,'மிகவும் சிக்கலான குழுக்கள் வாழ்வு முறை பெரிய கடவுள்களுக்கு அப்பால் விரிந்தது' என்ற தலையங்கதுடன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் அரசியல் ரீதியாக, அதிநவீன சமூகங்களின் எழுச்சிக்கு, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிகள் உதவி இருக்கலாம், ஆனால்'பெரிய கடவுள் சார்ந்த மதம்' தேவையில்லை என்று ஆரம்பிக்கிறார்.

ஆஸ்திரனேசிய மக்களின் சிறு தெய்வ வழிபாட்டின் ஆய்வில் பன்முகத் திறமையுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். 2015ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் கருத்துக்கள், அக்கால கட்டத்திலிருந்து, இதுவரை இந்த உலகை ஆட்டிப் படைக்கும் பெருந்தெய்வ வழிபாட்டுக்காரர்களால், மக்கள்படும் சொல்லொண்ணாத் துயர்கள் சாட்சிகளாக உள்ளன என்கின்றன.

பெருதெய்வ வழிபாட்டால் ஒரு சமுதாயத்தின், அரசியல் வாழ்வு நிலையில் என்ன மாற்றங்கள் வருகின்றன என்று ஆய்வு செய்யும், இங்கிலாந்தின் பேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மானுடவியலாளர், ஹெர்வி பீப்பல்ஸ(2015); என்பவர், 'பெருந் தெய்வ வழிபாடுகள், அரசியல் மற்றும், சமூகச் சிக்கல் தன்மையை ஓட்டாவிட்டாலும் கூட, அதைப்பாதிக்கவும், ஸ்திரப்படுத்தவம் முடியும் என்பதற்கு நல்ல சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். இந்த ஆய்வு, ஈர்க்கக் கூடியதும் மற்றும் புதுமையானது. ஆனால் பொதுமைப்படுத்தக் கடினமாக இருக்கும்' என்று அவர் மேலும் கூறினார்.

பெருதெய்வ வழிபாட்டிலிருந்து சிறு தெய்வ வழிபாடுகள் எப்படி வேறுபடுகின்றன என்பது பற்றி பல பேரறிஞர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் மானுடவியல் ரீதியில் 'சிறு தெய்வ வழிபாடுகளை ஆராயும்போது' மிக இன்றியமையாதவைகளாக இருக்கின்றன என்பதை இந்த நிகழ்ச்சிகு வந்திருப்பவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சிறுதெய்வ வழிபாடு என்பது வழிபடும் பக்தனுக்கும் கடவுளுக்கும் இடையில் தொடரும் 'மிக நெருக்கமான' உறவை அடிப்படையாகக் கொண்டது.

உலகத்திலுள்ள பெரும்பாலான மக்களின் மனநிலை, வாழ்க்கை, பொருளாதாரம், அரசியல் என்பற்றை ஆட்டிப் படைக்கும் இந்தப் 'பெரு தெய்வ வழிபாடுகள்' சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து மருவியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நியுசீலாண்ட ஆக்லெண்ட் பல்கலையைச் சேர்ந்த, கலாச்சார மாற்றங்கள் விடயங்களில் நிபுணரான திரு.யோசப் வார்ட்ஸ் என்பவர், 'பெருதெய்வ' வழிபாட்டை நம்புவர்களாகச் சொல்லிக் கொள்பவர்களால், இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சம் கொண்டு நடத்தப்படுகிறது என்பதற்கு என்ன தடயங்களுண்டு என்பதையும் ஆய்வு செய்கிறார்.

பிரிட்டிஸ் கொலம்பியன் பல்கலைக்கழகம் வான்கூவர், கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபணரான அரா நொரேன்ஷையான் என்பவர் தனது, கூற்றில், 'பெருதெய்வ வழிபாடுடையவர்கள், சமுதாயம், வேறு யாரும் தங்கள் மீறுதல்களைக் கவனிப்பதன் அச்சுறத்தலகளையம் தாண்டி வாழப் பழகிக் கொண்டார்கள்' என்று சொல்கிறார்.

மேற்குறிப்பட்ட மூன்று மேதாவிகளும், ஆஸ்திரனேசிய சமுதாயத்தின் சிறு தெய்வ வழிபாடுகளை ஆய்வு செய்வர்களில் ஒரு சிலர்.

தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறு தெய்வவழிபாடு என்பது, சிறு தெய்வங்களை வணங்கும் மக்கள், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பாடுகிறார்கள். தெரிந்த கலைத்துவத்தை ஆடலாகவும் பாடலாகவும் சமர்ப்பிக்கிறார்கள். தாங்கள் உண்ணும் உணவை' உபயமாகக் கொடுக்கிறார்கள். தங்கள் பிரச்சினையைச் சொல்லி 'குற்றத்தையும்' சிலவேளைகளில், 'தண்டனையையும்' ஒப்புக் கொள்கிறார்கள். இந்தச் சடங்கு, உரு ஆடுதல், கட்டுச் சொல்லுதல்' போன்றவையாகப் பரிணமிக்கும்.

இந்திய, இலங்கைத் தமிழர்களிடையே உள்ள சிறு தெய்வ வழிபாடுகள், குல தெய்வ வழிபாடுகள், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு, காவற் தெய்வ வழிபாடு, எல்லைத் தெய்வ  வழிபாடுகள் என்று பல விதத்தில் அழைக்கப் படுகின்றன என்ற விடயத்தை முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

இவை,அவர்களின் கிராமத்தின் வாழ்க்கை வழியுடன் மட்டுமல்லாது குலத்தின் பாரம்பரியத்தின் அடிப்படையிலும் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், தனித்துவமானவை. இயற்கையின் தத்துவங்களைப் பிரதிபலிப்பவை. மனிதத்தின் மாண்புகளைப் போற்றுபவை. முன்னோர்களை வழிபாட்டின் நீட்சியாகவிருப்பவை, தனது சமூகத்தின் பூர்வீகத்தின் புனிதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தத் தெய்வங்கள் ஒருகாலத்தில் அந்தக் கிராமத்து மக்களின் முன்னோராகும். தங்களுக்கு நன்மை செய்த தலைவனை வணங்கிய, தங்களுக்குப் போராடி உயிர் நீத்த வீரர்களை வழிபட்ட, பெண்மைக்காகப் போரடிய பெண்களைத் தெய்வமாக்கிய திராவிடியத் தமிழனின் அடிவேர்களாகும். இவர்கள் கற்பனையல்ல. கட்டுக்கதைகள் அல்ல. இதிகாசத் திரிபுகள் அல்ல. இந்த வழிபாட்டு முறை அறம் சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டது.

சிறு தெய்வ வழிபாடு, தென் இந்தியாவுக்கு ஜைனம், பௌத்தம், பிராமணியம் உள்ளிட முதலே கி.மு.8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரந்திருந்த வழிபாட்டு முறையாகும். பல்லாயிரம் வருடங்கள் கிரேக்க தேசம், எகிப்திய தேசம் என்று கடல் கடந்து வணிகம் செய்து வாழ்ந்த தமிழரின் நாகரீகம் படைத்த இனமாக வாழ்ந்தார்கள். அதற்கு உதாரணமாகங்கள் சிலவுள்ளன. கி.பி.2-3ம் நூற்றாண்டுகளில் தமிழர்கள், சங்கம் வைத்துத் தமிழ் வளர்ந்த கால கட்டத்தில், யூலிசர் சீசரின் மருமகனான உரோம சக்கரவர்த்தி ஆகஸ்டசைத் தமிழகத்துப் பாண்டிய மன்னனின் அரசதூதுவன் கி.மு முதலாம் நர்ற்றாண்டில் சந்தித்தாக அக்கால கட்டத்தில் வாழ்ந்த டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்த நிக்கலஸ் என்பவர் குறிப்பிட்டிருக்கிறார். அக்கால கட்டத்திலேயே, தமிழகத்தில் முருக வழிபாடு இருந்த தடயம், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருமுருகாற்றுப் படையில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அப்படி வாழ்ந்த தமிழச் சமுதாயம், ஆரிய வருகையின் பின், அளவிடமுடியாத மாற்றங்களைக் கண்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு தேசத்தை, ஒரு இனத்தை இன்னொரு இனம் அழித்து முடித்ததைப் பல சரித்திரங்கள் சொல்கினறன. அத்துடன் அரசியல் காரணங்களுக்காகச் சமயங்கள் பன்முகத் தன்மை எடுத்தததையும் சரித்திரங்களில் படிக்கலாம். கி.பி. நான்காம் நூற்றாண்டு காலகட்டத்தில் உரோமசக்கரவர்த்தி கொன்ஸரன்ரைன் என்பரால் கிறிஸ்தவ மதம், மேற்கத்தைய கலாச்சாரத்துடன் ஓழுங்குபடுத்தப் பட்ட ஒரு சமயக்கோட்பாட்டை முன்னெடுக்கத் தொடங்கியது. இயேசுநாதர் கடவுளின் திருமகன் என்றும், அவரின் கோட்பாடுகளை முன்னெடுத்து, மக்களை நல்வழிப்படுத்த சமயத்தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். கிறிஸ்தவத்திலிருந்த பெண் தெய்வ வழிபாடுகள் அகற்றப் பட்டன. அக்கால கட்டத்திற்கு முன்பு பல இனங்கள்,பல தேசங்கள், அதாவது, உரோம,கிரேக்கர் முன்னெடுத்து வழிபட்ட பெண் தெய்வ வழிபாடுகள் பின் தள்ளப் பட்டன. இக்கால கட்டத்திற்கு முந்தியே ஆரிய உள்ளீடு தமிழகத்தில் வந்ததால் சிறு தெய்வங்கள் ' தீண்டத்தகாத' கடவுளர்கள் ஆனார்கள். அத்துடன், சில,சிறு தெய்வ வழிபாட்டுத் தெய்வங்கள் பெரு தெய்வங்களாக உருமாற்றம் செய்யப் பட்டார்கள். பல்லாயிர ஆண்டுகள் பெயரும் புகமும் பெற்று வாழ்ந்த நாகரீகத்தையுடைய தமிழ் இனம் ஆரியரின் வருகையால் பெருமாற்றங்களைக் கண்டன. தமிழர்கள், அவர்கள் செய்யும் தொழில்,முறையில் சாதிரீதியாக முறையில் பிரிக்கப்பட்டார்கள். பெரிய சாதிக்கடவுளர்கள் புதிதாக உருவாக்கப் பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவிருந்தார்கள். வழிபாட்டு முறைகள் பிராமணயத்தின் முறையில் நகர்த்தப்பட்டன. அர்ச்சனை, விசேட பூஜைகள் என்று புதிய ' வழிபாட்டு' முறைகள் உருவெடுத்தது.

சங்க காலத்தில் தமிழர்களால் முன்னெடுத்த 'இயற்கை வழிபாடுகள்' அதாவது, குறிஞ்சிக் கடவுள் முருகன், முல்லைக் கடவுள் திருமால் அல்லது மாயோன், பாலைக் கடவுள் கொற்றவை அல்லது காளி, மருத நிலக்கடவுளாக வேந்தன் அல்லது இந்திரன் அல்லது வாயு, நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அல்லது கடலோன் என்ற பெயர்களில் திராவிடத் தமிழர் இயற்கையைப் போற்றி வணங்கினார்கள். இந்தக் கடவுள்களும் ஆரிய மயமடுத்தப் பட்டார்கள்.

இந்த விடயம் பற்றி இலங்கையைச் சேர்ந்த திரு.பா.இரகுவரன், ஆசிரியர் ஹாட்லி கல்லூரி அவர் தனது 'வடமராட்சியில் சிறு தெய்வ வழிபாடு-சில குறிப்புக்கள் என்ற கட்டுரையில் பின் வருமாறு சொல்கிறார்.

'சிறு தெய்வ வழிபாடு என்ற சொற்பதம், தற்செயலாகத் தோன்றியதல்ல. ஆரிய சமஸ்கிருதம் மற்றும் சாதித்துவ மேலாதிக்கத்தின் வரலாற்றை தன்னுள் வைத்துள்ள சொற்பதமாகும். இதேவேளை,உயர்நிலை மக்களிடையேயும் ஓரளவு விடுபட்டுப்போன சிறு தெய்வ வழிபாடு மீண்டும் இக்காலத்தில் குடும்ப, குலரீதியாக ஆரம்பித்தது' என்கிறார்.

அத்துடன் அவர். யாழ்ப்பாணத்தில், வடமராட்சி பிரதேசங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாடுகள் பற்றிச் சொல்லும்போது, 'வடமராட்சியில் காணப்படும் சிறு தெய்வங்களில் ஆண்தெய்வங்களாக வீரபத்திரர்,வைரவர்,காத்தவராஜன்,ஜயனார்,அண்ணமார்,அனுமான்,விறுமர்,பூதராஜர்,முனியப்பர்,பணிக்கர்,பெரிய தம்பிரான்,மாடன்,மதுரைவீரன்.கறுப்பர்,வீரவாகுதேவர்,நரசிங்கர்,வதனமார்,போன்ற சிறு தெய்வங்கள் வழிபடப் படுகின்றனர்.

பெண் தெய்வங்களாக- முத்துமாரி, காளி, கண்ணகி, நாச்சிமார், பேச்சி, செவ்வாச்சி (அடுப்பு நாச்சி) கொத்தி, கடலாச்சி போன்ற தெய்வங்கள் வழிபாட்டு நிலையிலுள்ளன' என்கிறார்.

இலங்கைக்கு,1505ம் ஆண்டில் போர்த்துக்கீசரும், அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் ஆக்கிரமித்தபோது, ஒட்டுமொத்தமான இலங்கை மக்களின் பாரம்பரியமும் துவம்சம் செய்யப் பட்டன. இலங்கை மக்களின், வழிபாட்டு இடங்கள் அழிக்கப் பட்டுப் போத்துக்கீசரின் கத்தோலிக்க தேவாலயங்கள் எழுந்தன.பலர் கிறிஸ்தவத்தைத் தழுவினர். அப்படியில்லாத தமிழர்கள் எப்படித் தங்கள் வழிபாட்டு முறையைத் தொடர்ந்தார்கள் என்பது பல இடங்களில் வாய் மொழிச் சரித்திரமாக இருக்கின்றன.

இது பற்றி திரு.பா.இரகுவரன் குறிப்பிடும்போது, 'மக்கள் இவ்வேளை, குடும்ப, குல ரீதியான தெய்வ வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். வீட்டு வளவிலுள்ள மரத்தையும், மரத்தின் கீழ் கல், பொல் (ஓலிப்பு முறை) என்பவற்றைத் தெய்வத்தின் குறியீடாகவும், படிவமாகவும் கொண்டு வணக்க முறைகளை நடத்தினர். கற்பூரம் கொழுத்தி தீபம் ஏற்றி வழிபட்டனர். பானைக்குள் தீபம் எரியத் தேவையான காற்று வந்துபோகக் குடத்தில் துளைகள் இட்டுவைத்து வணங்கினர்' என்கிறார்.

அந்நியர்கள் எங்கள் பகுதியிலுள்ள கோயில்களையடித்துக் கொடுமை செய்த விடயத்தை எனது பாட்டியார் சொன்னார். அதை நான் எனது 'தில்லையாற்றங்கரை' என்ற நாவலில் விபரித்திருக்கிறேன்.

வடமராட்சியில் குடத்திற்குள் உருவம் வைத்து வணங்கியதன் பாரம்பரியத்தின் தடயமாக அங்கு இன்னும் 'அடுப்பு நாச்சி வழிபாடு அல்லது செவ்வாச்சி' வழிபாடு இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது.

செவ்வாச்சிக்கு, நீர்க் கஞ்சி, வடை, கள், சுட்டமீன் என்பன படைக்கப் படுகினறன. இமையாணன் என்ற இடத்தில் நீருள்ள மண்குடம் வழிபடப்படுகிறது. இதனைப் பகவதியம்மன் என்று அழைக்கின்றனர்.

இலங்கையில் ஒல்லாந்தர் கால கட்டத்தில் 'சூலம்' மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதை ஆங்கிலத்தில 'டோட்டமிஸம்' அதாவது தங்களின் முன்னோரின் குல நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு குறியீட்டை வழிபடுவது என்று சொல்வார்கள்.

யாழ்ப்பாண நகர் சார்ந்த பகுதிகளில், தமிழ் சார்ந்த வழிமுறைகளை அப்புறப்படுத்திச் சமஸ்கிருத வழிபாட்டை முன்னெடுத்தவர் ஆறுமுக நாவலர் என்பது சரித்திரம். இவர், அங்கு நீண்டகால வழக்கிலிருந்து கண்ணகி.திரௌபதி என்ற பெண் தெய்வ வழிபாட்டை மாற்றினார். கண்ணகிக்குப் பதிலாக அவ்விடத்தில் புவனேஸ்வரி அமர்த்தப்பட்டார். வைதிக சமய முறைகள் தமிழ்க் கோயில்களிலில் புகுத்தப்பட்டன.

ஆனாலும் யாழ்ப்பாணப்பட்டினத்திற்க மிகத் தூரத்திலுள்ள மாதனை, மந்திகைப் பகுதிகளில் கண்ணகி வழிபாடுகள் 'வருடாந்த வேள்வி' போன்ற நிகழ்ச்சிகளுடன் தொடர்கின்றன.

சிறு தெய்வ வழிபாடுகளில் உயர்குல தெய்வங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி சார்ந்த கடவுள்களும் பல இடங்களில் இலங்கையிலும் வழிபடுகிறார்கள் என்ற தகவலைத் தருகிறார் திரு.பா.இரகுவரன் அவர்கள். அவரின் கூற்றின்படி, அண்ணமார் என்ற சிறு தெய்வ வழிபாடு பள்ளர் என்னும் மக்களால் நடத்தப்படுகிறது. தெய்வத்தின் குறியீடாகக் கல்லும், பொல்லும் காணப்படுகிறது.

பெரிய தம்பிரான் வழிபாடு: சலவைத் தொழிலாளர்களுக்குரியது. வன்னிப் பகுதியிலும் இது தொடர்கிறது. பூநகரி என்ற நகரில் தங்கள் பூஜைக்குரிய நெல்லை வேளாளரிடமிருந்து, சலவைத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்ற சொல்லப்படகிறது.

ஆனால் வடமராட்சியில், தும்பளை, புலோலி கிழக்கு, மாயக்கை, என்ற இடங்களில் பெரிய தம்பிரான் வேளாள உயர்குடியின் சிறு தெய்வமாக இருக்கிறது. வராத்துபளை பெரிய தம்பிரான் வயல் பாதுகாப்புத் தெய்வமாக வணங்கப் படுகிறார். இங்கு இந்தக் கடவுளுக்குக் கதிர்காமத் தீர்த்தத்திற்கு அடுத்தநாள் அன்னதானம் கொடுக்கப்படும்.

இமையாணன் வட்டவளவு என்ற இடத்திலுள்ள கோயிலில் நாகம் படமெடுத்த நிலையில் பெரிய தம்பிரானுக்கு மேலே இருக்கிறது.

இந்தியாவில் மதுரையில் மதுரைவீரன் கோயில் இருப்பதுபோல் இலங்கையிலும், வடமராட்சிப் பகுதியில், கொற்றாவத்தை, சமரபாகு, கிராமம் பகுதிகளிற் காணப்படுகிறது. இங்கு சூல உருவத்தில் காளி, வைரவர், மதுரைவீரன் என்போர் வணங்கப்படுகின்றனர். மதுரைவீரன் பெரும்பாலும் இந்திய வம்சாவழியினர் வாழும் பகுதியில் வணங்கும் சிறு தெய்வமாகத்தான் தெரியப்பட்டுள்ளார். வடமராட்சிக்கும் மதுரை வீரனுக்கும் உள்ள தொடர்பு ஆராயப் படவேண்டும்.

ஐயனார். வடமராட்சியில் ஐயனார் வழிபாடுண்டு.'ஐயனார் கலட்டி' என்ற இடமும் வடமராட்சியிலுண்டு. இவர் மட்டக்களப்பில் வணிகர் குல தெய்வமாக வணங்கப்படுபவர். வன்னிப் பகுதியிலும் ஐயனார் வழிபாடுண்டு. அங்கு ஐயனாரிடம் உறைவிடம்; காடு என்று கருதுகின்றனர்.

வன்னிப் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் ஐயனாரைத் தங்கள் 'வேளாண்மைத் தெய்வமாக' வழிபடுகிறார்கள். அறுவடையின் பின் பானைக்குள் தீபம் ஏற்றி வழிபடுவர். இது 'முட்டி மங்கல்ய' எனப்படுகிறது.

கொத்தி வழிபாடு: இந்தச் சிறு தெய்வம் பிரசவம் பார்க்கும் வேளையில் மருத்துவிச்சிக்கு உதவும் தெய்வமாக வழிபடப்படுகிறது. வடமராட்சியில் நளவர் சமுக, சலவைத் தொழிலாளர் மற்றும் தாழ்ந்த சமூகப் பெண்களே சிறந்த மருத்துவிச்சிகளாக இருந்தனர். பிரசவம் நடக்கும் நேரத்தில் ; கொத்திக்குக் கழித்தல்' என்ற வைபவம் நடைபெறும். கொத்தியைத் தெய்வமாக மட்டுமல்லாது 'கொத்திப் பேய்' என்ற நிலையிலும் பிரசவத்தில் வணங்கி உதவி பெறுதலும் பின் 'கழித்து' விடுவதுமான நிகழ்வு நடக்கிறது.

முத்துமாரி- காத்தாவராயன் வழிபாடு, காத்தவராயன் வழிபாடு முத்துமாரியம்மன் வழிபாட்டுடன் தொடர்புடையதாகவிருக்கிறது. மாரி என்றால் மழை. மழைத் தெய்வம் வறட்சியைப் போக்கவும், பொக்கிளிப்பான் அம்மை, சின்ன முத்து போன்ற வெப்பநோய்கள் தீரவும், கண் நோய்கள் வராமற் பார்க்கவும் முத்துமாரி வழிபடப்படுகிறாள். மாரியம்மன வழிபாடு கிழக்கிலங்கையிலும் வடக்கிலும் தாராளமாகவுண்டு.

காத்தான், முத்துமாரியம்மன் கோயில்களில் மட்டுமன்றி, ஏனைய பெண்தெய்வக் கோயில்களான, பத்திரகாளி, கண்ணகி, சக்தி, சாமுண்டிஸ்வரி, பண்டாரி அம்மன் போன்ற கோயில்களில் பிரகாரத் தெய்வமாக வடமராட்சியில் காணப் படுகிறது.

இலங்கையின் மற்றப் பகுதிகளை விட வடமராட்சியில் காத்தான் வழிபாடு சிறப்பாகவிருக்கிறது. காத்தான் கல், மரம், கழுமரம் என்பவற்றில் அமர்தப்பட்டுள்ளார். கழுமரம் காத்தானின் அகோர நிலையான கழுவேறியைக் குறிக்கிறது என்பர். வல்வெட்டித்துறை மத்தி, மாவடிக் கிராமத்தில், காத்தான் கோயிலுக்கு கழுவெறியும்,( கழுமரம்) அருகில் காத்தான் சூலமாகவும் காணப்படுவது இரண்டு வெவ்வேறு தெய்வம் எனக் கூறப்படுவதற்குச் சான்றாக உள்ளது.

கற்கோவளம் அம்மன் கோயிலடியில் உள்ள காத்தானை விக்கிர நிலையில் உருவமாக வழிபடுகின்றனர்.

கழுவேறியை 'ஞானக் காத்தான'; என்ற கூறி இதற்கு 'மச்சப்படையல்' படையாத கோயில்களும் உண்டு. இது பிற்காலத்தைய ஆகமவழிபாட்டின் எச்சமாக மச்சமாமிசங்கள் படைக்கும் வழக்கம் இல்லாதொழிந்து காணப்படுகிறது.

தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோயிலில்.இருந்த காத்தான் கோயிலும், முன்னர் புகழ்பெற்று விளங்கியது. பொதுவாக காத்தானுக்கு மச்சப் படையல்கள், சாராயம், ரொட்டி என்பன படைப்பர். நளவர் சமுகம், இந்தப் படையலில் முன் நிற்பர். மச்சச் சாப்பாடு பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.(காசு கொடுத்து வாங்குவர்).இது 'சிவ மருந்து' என்ற அழைக்கப் பட்டது. நோய்ப்பிணிகள் மற்றும் ஆபத்துக்களில் இருந்து காக்கும் சக்தி இந்த 'சிவ மருந்து' (மச்சப்படையல்)க்கு எண்டு எனக்கூறுவர்.

கிராமங்களிலில் பாதுகாப்புத் தெயவங்களாக இருக்கும் பெரும்பாலான சிறு தெய்வங்கள், பெண்தெய்வங்களாகும். இது ஆதித் தமிழரின் தாய்வழி மரமை நினைவூட்டுபவை. இதுபற்றி இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த திரு.மா.நாகராஜா என்ற இந்து தமிழ் மகா வித்தியாலய அதிபர் கூறும்போது,' பெண் தெய்வங்கள் எல்லாம் கல்லாக, மரமாக, மண்ணாக எல்லா வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழிபாட்டுத் தெய்வமாக இருந்தன.' என்கிறார்.

கிராமங்களில் எளிமையான வாழ்வின் பாதுகாப்பு தெய்வமாக அதிகளவில் பெண் தெய்வங்களே உள்ளன. மிகவும் சதாரணமான வழிபாட்டு முறைகள்,நேர்த்திகள்,விரதங்கள் என்பன நேர்முகமாகவே சிறு தெய்வங்கள் மீது தொடர்வு படுத்தப்பட்டன எனறு இவர் மேலும் சொல்கிறார்.

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டின் தொல் ஆய்வுத் தடயங்கள் சிந்துவெளி நாகரீகத்துடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

தமிழர் கலாச்சாரம் சமத்துவத்துடன் வளர்ந்த நாகரிகத்தைக் கொண்டது. சிவனை வணங்கியவர்கள் சிவ சக்தி என்ற தத்துவத்தை யதார்த்த வாழ்க்கையின் நியதியாக்கியவர்கள். கிராமத்தாரின் பெண்காவற் தெய்வ வழிபாட்டு முறை, ஒருகாலத்தில் அக்கிராமத்தில். பெண்களுக்கெதிரான பலாத்காரம், அடக்குமுறை, அடிமைத்தனம் போன்ற கொடிய சிந்தனைகளுக்கு எதிராகப் போரடிய பெண்ணின் கதையாக இருக்கலாம். அவளின் கதை,காலக்கிரமத்தில் அந்தக் கிராமத்தின் வாய்வழிச் சரித்திரத்தில், சக்தியாக உருவெடுத்த காக்கும் கடவுளாகிறாள்.

அதுபோலவே தங்கள் வாழும் மக்களின் நன்மை சார்ந்து போரிட்டு வெற்றியீட்டிய ஆண்களும் சிறு தெய்வ வழிபாடுகளில் உள்ளார்கள். மதுரைவீரன் மதுரையிலும் காத்தவராஜன் தஞ்சையிலும் மக்களைக் காக்க வந்த வீரர்களாக வணங்கப் படுகிறார்கள்.

வட தமிழகத்திலிருக்கும் 'பாஞ்சம்மன் வழிபாடு' உடன் கட்டை ஏறி இறந்த விதவைப் பெண்களைக் கவுரவிக்கும் வழிபாடாகும். மக்களால் வணங்கப்படும் சில தெய்வங்கள் அநியாகமாக இறந்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்கு உதாரணம் கண்ணகி அம்மன் வழிபாடு, திரௌபதி அம்மன் வழிபாடு போன்றவையாகும்.

பொள்ளாச்சியிலுள்ள மாச்சானி அம்மன் கதை, தனது தோட்டத்தில் காய்த்த மாம்பழத்தை உண்ட ஒரு பெண்ணைக் கொங்கு நாட்டு அரசன் கொலை செய்தார் என்ற வரலாற்றைக் கொண்டதாகும். பசி தீர்க்க ஒரு பழம் பறித்த குற்றத்திற்காகக் கொலை செய்யப் பட்ட அந்தப் பெண் மக்களால் தெய்வமாக்கப் பட்டிருக்கிறாள்.

வட தமிழகத்தில் மகாபாரதக் கதையில் வரும், திரௌபதி, தர்மர், காந்தாரி, குன்தி, அருச்சினன் மகன் என்போர் சிறு தெய்வங்களாக வணங்கப் படுகிறார்கள். இந்தத் தெய்வங்கள் மக்கள் பார்வையில் உத்தமர்களாக, நல்லவர்களாக, கொடுமைகளை அனுபவித்தர்களாக இருப்பதால் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கடவுள் நிலைக்கு உயர்த்தப் பட்டிருக்கிறார்கள் என்று பதிவிடப்பட்டிருக்கிறது..

இந்தத் தெய்வங்களின் இருக்கை, கிராமங்களில் பல்வேறு இடங்களிலிருக்கும். உதாரணமாகப் பிரசவம், விவசாயம் போன்றவற்றிறகு முக்கியமான தெய்வம் மக்கள் வாழுமிடத்தின் நடுவிலிருக்கும். அதையும் தவிர, பல பெண் தெய்வங்கள் ஊர் எல்லையிலிருப்பார்கள். சிறு தெய்வங்களில் அதிமிகு உயர்நிலையில் இல்லாதவர்கள் ஊர் எல்லை, பாம்புப் புற்றருகில், மரத்திற்கு அருகில் வைத்து வணங்கப் படுவார்கள்.

அய்யனார். திறந்த வெளியில் கம்பீரமாக வைக்கப் பட்டு வழிபடுவார்.

நாக வழிபாடு இந்தியாவிலும் இலங்கையிலும் நாக உருவம் கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கும். படம் விரித்த நாகம். அல்லது இரண்டு நாகங்கள் ஒன்றாக இணைந்ததாக இந்த வடிவங்கள் இருக்கும். இருநாக இணைவு உருவமைப்பு நிலத்தையும் நிலத்தில் விளையும் பயிரையும் முதன்மைப்படுத்தி வணங்கப் படுவதாகும்.

பெரும்பாலான சிறு தெய்வ வழிபாடுகள் அந்த இடத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை மொழியுடன் இணைந்தது. இந்தச் சிறு தெய்வங்கள் பற்றிய கதைகளைச் சிலவேளைகளில் வில்லுப்பாட்டாக மக்களுக்குச் சொல்லார்கள்.

 இந்தியாவிலும் இலங்கையிலும் சில சிறு தெய்வங்களுக்கு ஆடு வெட்டி அல்லது கோழி வெட்டிப் பலி கொடுப்பார்கள். இலங்கையில், அம்மன் சடங்குகளில் பேயாடலும் நடக்கும். பேயாடும் பெண்களுக்கு 'உரு' வரும் அதாவது ' தெய்வம்' அவர்கள் மூலம் பேசும். அப்போது அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்குப் பல விடயங்களைச் சொல்வார்கள். பக்தர்களிடம் கேள்வி கேட்பார்கள். பக்தர்கள் உண்மையைச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவார்கள் .அத்துடன் அந்தக் கிராமத்திற்கோ அல்லது பக்தர்களுக்கோ தீமை செய்ய நினைப்பவர்களையும் செய்தவர்களையும் உரு வந்த 'தெய்வம்' கண்டிக்கும். இதை ஆங்கிலத்தில் 'ஷாமனிஸம்' என்று சொல்வார்கள்.அதாவது,பூஜாரி 'உரு' வந்து ஆடும்போது, கடவுள் அவர் மூலம் வந்து வழிபாட்டார்களுடன் தொடர்பு கொள்கிறார்.

மேற்படி சடங்கு பற்றியும் பேயாடலில் மக்களுக்குள்ள நம்பிக்கை பற்றியும் 'மேதகு வேலுப் போடி' என்ற சிறு கதையில் எழுதியுள்ளேன். அக்கதையில் சிறு தெய்வங்களில் மக்களுக்குள்ள பயமும் நம்பிக்கையும் தெளிவாக விளங்கப் படுத்தப் பட்டிருக்கிறது. 'சாமி' வந்தாடல் என்பதன் விளக்கங்கள் இடத்திற்கு இடம் வேறுபடலாம். இந்தச் சடங்கு கிட்டத்தட்ட 'ஒரு வழக்கு மன்றம் போலிருக்கும்'.  இந்தச் சடங்குககள் மானுடவியல் முறையிற் பார்க்கும்போது, ஒரு கிராமம் எப்படி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த வசனத்தை எழுதும்போது, ஆஸ்திரனேசியப் பகுதிகளில், 400 குழுக்களுடன் கலந்துபேசி, 96 குடிகளின் 'சிறு தெய்வ வழிபாடுகளை' ஆய்வு செய்த திரு.வுட்ஸ் என்பவர் பதிவிட்டதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம் அவரின் கூற்றுப்படி, 'மனிதனின் நாகரீக வளர்ச்சியில் வெண்கலக் காலவியலுடன் சம்பந்தப்பட்ட இந்த வழிபாடுகள்தான் இன்றைய பெருதெய்வ வழிபாடுகளின் மூலம' என்று சொல்கிறார்.

தமிழ் மக்கள் வாழும் பல இடங்களில் முன்னோர்களின் கதைகள் கல் வெட்டுக்களில் பதிக்கப் பட்டிருக்கின்றன. இவை வாய்வழி மொழிக் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. பல சிறு தெய்வங்களையுள்ளடக்கியது. இத் தெய்வங்கள் அவர்களை வணங்கும் மக்களின் நன்மை தீமைகளை நிர்ணயிக்கும் சக்திகளாகக் கருதப்படுபவை. இவை, பிராமணர்களல்லாத தமிழர்கள் பலரால் இன்றும் முன்னெடுக்கும் வணக்க முறையாகும். ஆனால்,மேற்கு மகாரஷட்டிரா, வங்களாம், பீகார் போன்ற பகுதிகளில் இந்த சிறு தெய்வழிபாட்டிலும் பிராமணியத்தன்மை பொருத்தப் பட்டிருக்கிறதாகச் சொல்லப் படுகிறது.

இது பற்றி திரு நாகராசா அவர்கள் சொல்லும்போது, 'நாடோடிகளாகவிருந்த ஆரியர்கள், இந்தியாவுக்கு வருகை தந்தபின் அவர்களின் பல்வேறு,சமூகக் குலங்களுக்கு தலைவர்களாக இருந்தவர்கள் பின்னாளில் தேவர்களாக உருவாகினார்கள் என்கிறார்.

அத்துடன்,பெண்வழிபாடு பற்றிச் சொல்லும்போது, 'லௌகீக வாழ்வில் உழைத்து சுரண்டப்படும் மக்களின் துயர்களையும், தெய்வங்கள் இந்த சக்தியின் சிறு தேவதைகளாக காட்டப்படும் சிறு தெய்வங்கள்தான். இந்த மக்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்கான தலைமை தாங்கும் தாய்மை தெய்வமாகும்.' என்று சொல்கிறார்.

தென்னிந்தியா மட்டுமல்லாமல் கிழக்கிலங்கையிலும் வணங்கப்படும் பெண் தெயவங்களில் மாரியம்மன் மிக முக்கியமான பெண் தெய்வமாகும்.

கிராம தேவதைகளை மூன்று விதத்திற் பார்க்க வேண்டும். அவர்களின் மண்ணின் விருத்தியுடன் இணைந்தது. இந்தத் தெய்வங்கள் அவர்களை வணங்கும் மக்களையும் அவர்களின் கிராமத்தையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் இந்தப் பெண் தெய்வம் அந்த ஊர்ப் பெண்களின் சுகமான கர்ப்பம், பிள்ளைப் பெறு என்பதற்கும் பொறுப்பானது. இந்தத் தெய்வங்கள் அவர்களை வணங்கும் கிராமத்தின் மழைவீழ்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும் பொறுப்பானது. அத்துடன், சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் வராமற் பாதுகாப்பதும் இந்தத் தாயின் பொறுப்பாகும்.

சில தெய்வங்கள் கிராமத்தவரின் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வணங்கப்படும். குழந்தைகளின் சுக நலங்களைப் பாதுகாக்கும் தெய்வமாக வணங்கப்படும். இந்த வணங்கமுறை இங்கிலாந்தில் உரோமர் வரும்போது இருந்த மக்களின் வணக்க முறையை ஒட்டியிருக்கிறது. அதாவது, ஆதிகால மக்களின் வணக்கமுறை கிட்டத்தட்ட ஒரே மாதிரி, இயற்கையையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் சார்ந்து வளர்ந்திருக்கின்றன.

மட்டக்களப்பு அம்பாரை மாவட்டம், இன்றும் தாய்வழி மரபுசார்ந்து, வாழும் இயற்கைக்கு முன்னிடம் கொடுத்து வாழும் கிழக்கிலங்கையில் திரௌபதி அம்மன் வழிபாடு, கண்ணகியம்மன் வழிபாடு மிகவும் பிரமாண்டமான முறையில் வணங்கப் படுகிறது. திரளெபதிக்கும் கிழக்கிலங்கைக்கும் பூர்வீகத் தொடர்பும் உள்ளதற்குச் சரித்திரச் சான்று சார்ந்த கதைகளுமுண்டு.

கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் சரித்திரம் கி;மு.250ம் ஆண்டுகால கட்டத்தில் ஆரம்பித்தது. கலிங்கத்தை வென்ற அசோகனால் நாடு கடத்தப் பட்ட 'சிவனை' வணங்கிய 150.000 மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவர்களில் இலங்கைக்கு வந்த பெரும்பாலான மக்கள் இலங்கை மன்னன் முத்து சிவனால் கிழக்கில் குடியேற்றப்பட்டான். இந்த மக்களின் ஆடல் பாடல், நாடகக் கலைகள், வழிபாட்டு முறைகள், பாரம்பரிய வைத்திய முறைகள் என்பன இலங்கையில் எந்தத் தமிழ்ப் பகுதியிலும் காணமுடியாதவை. நீண்டகால வரலாற்றைக் கொண்டவை. இங்கு,கலிங்நாட்டிலிருந்த வந்த மக்களின் 10 க்கு மேற்பட்ட குடிகளும்,அதையும் விட பல சாதியமைப்புகளுமுள்ளன.

கிழக்கிலங்கைத் தமிழர், அங்கு வாழும் பௌத்தர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்போருடன் சோர்ந்து வாழ்வதால் 'எம்மதமும் சம்மதமே' என்ற தத்துவத்தைச் செயற்படுத்துபவர்கள்.ஆனாலும் கடந்த காலத்தில் அரசியற் பிரச்சினையால் மிகவும் பாதிக்கப் பட்டார்கள் அவர்களின் பாரம்பரிய கோயில்கள் நாசமாக்கப்பட்டன.

கிழக்கிலங்கை பெண் தெய்வங்களுக்குப் பெயர் பெற்ற இடமாகும். காளி,பத்திரகாளி, வட பத்திரகாளி வழிபாடுகள் தட்டார மக்களாற் செய்யப்படும். இங்கு மாரியம்மன் வழிபாடு, பெருங்குடி மக்களாலும் ஓரிரு இடங்களில் நகைவேலை செய்யம் தட்டார் சமுகத்தாலும் தொடரப்படுகிறது.

1.இங்கு குமக்கன் என்ற இடத்திலுள்ள காளத்தி அம்மன் கோவில் பத்தினித் தெய்வ வழிபாடு, உள்மடைச் சடங்குகள் காவியப் பாடலுடன் நடக்கும்.

2. பாணமை பத்தினி அம்மன் ஆலயம் - விசேடபூஜை காலங்களில் கொம்பு முறி விளையாட்டுடன் நடக்கும்.

3. பொத்துவில் குண்டு மாடு பத்திரகாளி அம்மன் ஆலயம், சடங்குகள் நடக்கும்போது, கத்தியில் நின்று 'கட்டு' சொல்லுதல் நடக்கும்.

4.மாமங்கை மாரியம்மன் ஆலயம் வருடத்தில் ஒருநாள் நடக்கும் சடங்கு முறை: பொங்கல் வழிபாடு. உள்வெளி மடை முறை, திருக்குளிர்த்தி பாடுதல்.

5. சகல கலை அம்மன் ஆலயம்: கதவு திறந்து சடங்கு முறை.

6. தம்பிலுவில், பட்டிமேடு, கண்ணகி அம்மன், கோளாவில், காரைதீவு கண்ணகி அம்மன் வழிபாடுகள், 'கப்புகன்' என்ற பூசைமுறையில் நடக்கும் .இங்கு, தீக்குளித்து உற்சவம் நடக்கும். சடங்கு முறை 'உள்மடை' யாகவிருக்கும். காவியம் பாடல் திருக்குளிர்த்தி பாடல் என்பன இருக்கும்.

7. அக்கரைப்பற்று வீரகாளியம்மன் ஆலயம். அக்கரைப்பற்று பத்திரகாளி; அம்மன் ஆலயம், தம்பிலுவில் முனையூர் பத்திரகாளி அம்மன் ஆலயம், சேனைக் குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயம். சம்மாந்துறை பத்திரகாளி அம்மன் ஆலயம், என்பவற்றில் திருக்கதவு திறத்தல், பரப்பு மடை, சடங்கு முறை நடக்கும். கலை ஆடுதல், பலி பூசைகள், தீமிதிப்பு நிகழ்வுகள்.

8. கோளாவில் முத்துமாரி அம்மன் வழிபாடு; குல தெய்வழிபாடு. வீட்டில் இனிப்புப் பொங்கலுடன் நடக்கும் நடுச்சாமத்தின் பின் இந்த வழிபாட்டில் ஒரு அங்கமாக வீரபத்திரக் கடவுளுக்கும், வைரவருக்கும் படையல்கள் வைக்கப் படும். வீரபத்திரருக்கு, 'மடை' இதில் கஞ்சா ரொட்டியும் வைக்கப்படும்.

முத்துமாரியம்மன்: ஆலய வழிபாட்டில் ஒரு வருடத்திற்கு ஒருதரம் திருக்கதவு திறத்தல். சடங்கு முறை, மடை பூசைகள். தெய்வம் ஆடுதல்,காவியம், மாரியம்மன்  குளிர்த்திப் பாடல்கள், பக்த அடியார்களின் நேர்த்தி பொங்கல்.

9. பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம். மிக விசேடமானது. தீக்குளிப்பு நடைபெறும்.

10. அக்கரைப் பற்று பெரிய தம்பிரான் ஆலயம். சலவைத் தொழிலாளர்களால் வழிபடப்படுகிறது.

11. கடல் நாச்சி அம்மன்: ஒரு வருடத்தில் ஒரு முறை கடற்கரை மடை.தெய்வம் ஆடுதல் சடங்கு முறை, காவியம் பாடல் மன்றாட்டு வழிமுறை.

அய்யனார், கருமாரியம்மன் போன்ற சிறு தெய்வ வழிபாடுகளை ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்துகிறார்கள்.

12. குல தெய்வ வழிபாடு, குமாரசுவாமி வழிபாடு; ஆண்களால் நடத்தப் படுவது. பெண்கள் அணுகக்கூடாத வழிபாட்டு முறை.

மட்டக்களப்பில் பல இடங்களில் பிரபலமாகவிருக்கும் கண்ணகி வழிபாடு வரலாறு: கி;பி ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில், இலங்கையையாண்ட மன்னர்கள், திருமணத்தொடர்பு மூலம் கேரளாவுடன் மிகவம் நெருக்கமாயிருந்தார்கள். கேரளாவில் பத்தினி வழிபாடு (கண்ணகி வழிபாடு) முக்கியமாகவிருந்தது. அதனால், அவர்களுடனான தொடர்பால், இலங்கையிலும் பத்தினி வழிபாடு முக்கியமானது.

இன்று இலங்கையின் பாதுகாவல் தெய்வமாக 'பத்தினி தெய்யோ' இடம்படித்திருக்கிறாள் கண்டிய மன்னராட்சியின் நிர்வாகத்திருந்த, கிழக்கில்ஙகையில் கண்ணகி வழிபாடு மிக மிக முக்கியமானது.

இந்தப் பெண் தெய்வ வழிபாடுகளும் சடங்குகளும் கிழக்கிலங்கைக்கு மட்டும் உரித்தான பல விசேட சடங்குகளைக் கொண்டவை.

இவை ஆகம முறையில் நடப்பதில்லை. ஆதிகால முறையில் மக்களை வாழவைக்கும் தெய்வத்திற்கு, அவர்களால் கொடுக்கப்படும் 'படையல்கள்' மூலம் வணங்கப்படுகிறார்கள். போர்க்காலத்தில் தொடர முடியாத பல சடங்களும், குல தெய்வ வழிபாடுகளும் மக்களால் இன்று பல இடங்களில பழையபடி தொடங்கியிருக்கின்றன.

சிறு தெய்வ வழிபாடுகள் ஒரு சமுதாயத்தின் பாரம்பரியத்தின் நீட்சி. அந்தத் தெய்வத்தை வழிபடும் அத்தனை மக்களையும் பேதமின்றி இணைக்கும் ஒரு மாபெரும் சக்தி. பழைய கலைகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைப்பணி. இந்தப் பன்முகப் பரிமாணங்களை இலங்கையில் நடைபெறும் திரவுபதி தீக்குளிப்பு வைபவம், கண்ணகி குளித்திப்பாடல் வைபவம் போன்றவற்றில் காணலாம்.

'சிறு தெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணி-ஒரு நோக்கு என்ற கட்டுரையை எழுதிய திரு மா. நாகராஜய அவர்களின் கூற்றின்படி, 'மனித குல வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகவே அமைந்துள்ளது. சமுதாயத்தில் இருவர்க்கங்கள் எப்போதும் பிளவுண்டு ஒன்றையொன்று எதிர்த்தும், சார்ந்தும், வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளன. ஆன்மீகம் சார்ந்த சமயங்களும் ,இந்த இரு பிரிவினர்களுக்கு உரிய முறையில் வளர்ச்சியடைந்துள்ளன' என்று கூறுகிறார்.

அவர் கூற்றிலிருந்து,'மக்கள் மயப் படுத்தப்பட்ட சிறு வழிபாடுகளும் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்த பின்னரும் அந்த வழிபாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் இன்னும் நீடித்துக்கொண்டு செல்கிறது என்பது தெரியும்.

அத்துடன், 'வடமராட்சியில் சிறு தெய்வழிபாடு - சில அறிமுகக்குறிப்புகள்' என்ற கட்டுரையை எழுதிய திரு.பா.இரகுவரன் தனது கட்டுரையில் காட்டிய,'அலெக்ஸாண்டர் கோத்திரோவ்' என்பவரின் மேற்கோளையும் சொல்லி எனது உரையை முடிக்கிறேன்.

'மனித சமூகங்களில்,காணப்படும் வழிபாட்டு முறைகள் இதனுடன் தொடர்புடைய சடங்குககள்,புராண ஜதிகக் கதைகள்,கிராமியக் கதைகள்,மற்றும் கற்பனைக் கதைகள் என்பவற்றில் இருந்து பொய்களை நீக்கி வடித்தெடுப்போமானால்,காலத்தை மறைத்து நிற்கும் திரையூடே உண்மையான சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ளலாம்'. 

நன்றி: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-எம்.ஏ (மானுட மருத்துவ வரலாறு)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved