கோவையில் களைகட்டும் கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா!
இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் பிறந்தநாள் விழா களைகட்டத்தொடங்கியுள்ளது. கோவை ஈச்சனாரியில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் அரசியல் கட்சியினர் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வமாக உள்ளதாக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை முழு உற்சாகத்தோடும், எழுச்சியோடும் கொண்டாட கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துவருகிறது. கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் ஈச்சனாரியில் அமைந்துள்ள மாவீரன் சிலைக்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வரவுள்ளனர். இது தவிர தேவராட்டம், வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. ஆடல், பாடல் உற்சாகத்தோடு, சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தரவுள்ள அரசியல் கட்சிப்பிரமுகர்களுக்கு கட்சி பேதமின்றி சிறப்பான வரவேற்பளிக்க கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கம்பளத்தார்கள் அவரவர் சார்ந்த கட்சித்தலைவர்களை அழைத்துவர தீவிரம் காட்டி வருகின்றனர். வழக்கமாக திமுக,அதிமுக,பாஜக கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் விழாக்களை தவறவிடுவதில்லை. அதேபோல் நாளை நடைபெறும் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தாமோதரன், சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஈச்சனாரியில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மாவீரனுக்கு மரியாதை செலுத்த உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.