🔴 LIVE | முப்பெரும் விழா 2023


3500 ஆண்டுகள் வரலாறு கொண்ட டயபடீஸின் கதை!

டயபடீஸின் கதை (The Story of Diabetes):

டயபடீஸ் எனும் நோயின் தொடக்கம் மனித நாகரிகத்தின் ஆரம்ப காலங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைய எகிப்தில் இந்நோய் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அக்காலத்தில், அதிக அளவு சிறுநீர் சுரப்பதை இதன் முக்கிய அறிகுறியாகக் கருதினர். இதற்கு மருந்தாக, நீர், பேரிச்சம்பழம், பியர், பால் மற்றும் சில மூலிகைகளை ஒரு குடுவையில் கலந்து நோயாளிகளுக்கு வழங்கினர். இது பலனளிக்காதபோது, அடுத்தகட்ட சிகிச்சையாக ஆலிவ் எண்ணெய், தேன், உப்பு, பழவிதைகள் ஆகியவற்றை மலத்துவாரத்தின் வழியாக உடலில் செலுத்தினர். இதனால் நோயாளிகள் கடுமையான வலியை அனுபவித்தபோதும் நோய் குணமடையவில்லை.

கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் (கிமு 400 இல்) முதன்முதலாக டயபடீஸ் பற்றி அறிவியல் பார்வையில் பேசினார். அவர், இந்நோய் உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சி செய்ய வேண்டுமென பரிந்துரைத்தார். இருப்பினும், அவரது புரிதலில் தவறு இருந்தது. டயபடீஸ் என்பது உடல் தசைகள் சிறுநீராகக் கரைவதால் ஏற்படுவதாக அவர் நம்பினார். 

இதற்கிடையில், இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் டயபடீஸின் பல மர்மங்களை வெளிப்படுத்தியது. கிமு 600இல் வாழ்ந்த சுஷ்ருதர் மற்றும் சரகர் எனும் மருத்துவர்கள் இதை ஆராய்ந்தனர். நோயாளிகளின் சிறுநீரை எறும்புகள் சூழ்வதைக் கவனித்த அவர்கள், அதை சுவைத்து இனிப்புத்தன்மையைக் கண்டறிந்தனர். இது அன்றைய காலத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு. 19ஆம் நூற்றாண்டு வரை, சிறுநீரின் இனிப்பை சோதிப்பதே டயபடீஸைக் கண்டறியும் முறையாக இருந்தது. இதனால், இந்நோய்க்கு “மதுமேகம்” எனப் பெயரிட்டனர். “மது” என்றால் தேன், சிறுநீர் தேனைப் போல இனிப்பதால் இப்பெயர் வந்தது.

இன்று “டயபடீஸ் மெல்லிடஸ்” என அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம், ஏனெனில் “மெல்லிடஸ்” என்ற லத்தீன் சொல் “தேன்” என்று பொருள்படும்.

சுஷ்ருதரும், சரகரும் டயபடீஸை இரு வகைகளாகப் பிரித்தனர்: டைப் 1 மற்றும் டைப் 2. குண்டாக உள்ளவர்களுக்கு வருவது டைப் 2, ஒல்லியாக உள்ளவர்களுக்கு வருவது டைப் 1 எனக் கண்டறிந்தனர். மேலும், டைப் 1 நோயாளிகள் நீண்ட நாள் உயிர்வாழ மாட்டார்கள் என்பதையும் உணர்ந்தனர். 

மதுமோகம் பெரும்பாலும் உடல் பருமனானவர்களைத் தாக்குவதைக் கண்ட சுஷ்ருதர், தனது “சுஷ்ருத சம்ஹிதை” நூலில் உடற்பயிற்சி மற்றும் சில மூலிகை சூரணங்களை பரிந்துரைத்தார். அவர் பிளட் பிரஷரையும் அறிந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன—“வாதரக்தம்” என்று அவர் குறிப்பிட்ட நோய், இன்றைய உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒப்பாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் இந்த அறிவு அரேபியர்கள் மூலம் ஐரோப்பாவிற்குச் சென்றது. 10ஆம் நூற்றாண்டு அரபு மருத்துவ நூல்களில், வெந்தயத்தைக் கரைத்து குடிப்பது டயபடீஸுக்கு மருந்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், 16ஆம் நூற்றாண்டில், சிறுநீரில் உள்ள இனிப்பு சர்க்கரையால் ஏற்படுவது என்பதும், அது சிறுநீரகத்திலிருந்து அல்ல, ரத்தத்திலிருந்து வருவது என்பதும் உறுதியானது. இது டயபடீஸ் பற்றிய புரிதலில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

ஜான் ரோலோ (John Rollo) என்பவர் 1797இல் An Account of Two Cases of the Diabetes Mellitus என்ற நூலை எழுதினார். இதில், அவர் டயபடீஸ் நோயாளிகளுக்கு இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை பரிந்துரைத்தார், மேலும் கார்போஹைட்ரேட்டுகள் (ரொட்டி, உருளைக்கிழங்கு) நோயை மோசமாக்குவதாகக் கண்டறிந்தார். 

1921இல் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது டயபடீஸ் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியது. இதன்பின், உணவு கட்டுப்பாடு மீதான ஆர்வம் குறைந்து, “என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், இன்சுலின் எடுத்தால் போதும்” என்ற எண்ணம் மக்களிடையே பரவியது. இன்று, டயபடீஸ் பற்றிய அறிவு அறிவியலுடன் முன்னேறியுள்ளது, ஆனால் அதன் பண்டைய தொடக்கங்கள் நமக்கு மருத்துவத்தின் நீண்ட பயணத்தை நினைவூட்டுகின்றன.

நன்றி: நியாண்டர் செல்வன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved