பேரறிஞர் அண்ணா மேற்கோள்காட்டும் கம்பளத்தாரின் தனித்துவமான பண்பாடு!
ஏன் திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் இயக்கத்திலும் பிராமணர்களுக்கு எதிராக கலக்குரல் எழுந்தது? எல்லா சாதிகளிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருப்பது சகஜம் தானே?. அதற்காக யாரும் ஒட்டுமொத்த சாதியையும் குறைகூறுவதில்ளையே?. எப்படி ஒரு சாதியை மட்டும் விலக்கி வைத்துவிட்டு பிராமணர் அல்லாதோர் சங்கம் என ஒரு சங்கம் தொடங்கப்பட்டது எதனால்? அப்படி என்ன குற்றம் இழைத்துவிட்டனர் பிராமண சமூகத்தினர்? ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பிராமணர் சமூகம் எதிரியானது எப்படி? இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் அனைத்து அதிகாரங்களில் கோலோச்சுவது எப்படி? எனவே ஒரு சமுதாயம் மிக அதிக தாக்குதலுக்குள்ளாகின்ற போது அதற்கான பின்னனியை தெரிந்துகொள்வது மிக முக்கியமானது. அந்த வகையில் ஒரு நீண்ட கால வரலாற்று பின்புலத்தை அறிந்துகொண்டு அறிஞர் அண்ணா எழுதிய நூல் குறித்து பார்ப்போம்.
அறிஞர் அண்ணா தனது தொடக்க கால பொதுவாழ்வு பயணத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமிழ், தமிழர் நலன் என இனம், மொழி சார்ந்து திராவிட இயக்க மேடைகளிலும், கலை, இலக்கிய, நாடகம், சினிமா என சாத்தியான அனைத்தின் வழியாகவும் தனது கருத்தை வெகுஜன மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். பல நூல்களை படைத்துள்ள அறிஞர் அண்ணா தான எழுதிய நூல் ஒன்றில் இந்த மண்ணின் பூர்வகுடி பண்பாடு, கலாச்சாரமும் வைதீகத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தின் மேலானவர்களாக அறிவித்துக்கொண்ட ஒரு இனக்குழுவின் வாழ்வியலில் இருந்து எவ்வாறு மாறுபட்டுள்ளது என்று தர்க்கரீதியாக நிறுவ முயல்கிறார். தன் வாதத்திற்கு துணைக்கு அழைத்துக்கொண்டது ஒரே ஒரு சாதி அது கம்பளத்தார் மட்டுமே. அறிஞர் அண்ணா போன்ற மேதைகள் எடுத்தியம்புமளவிற்கு தனித்துவம் வாய்ந்த கம்பளத்தாரின் பண்பாடுகளை கட்டிக்காப்பது நமது கடமையாகும்.
இக்கட்டுரையின் முதல் பாகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பேரரசு காலத்தில் கோவில்கள் பெரும்கோவில்களாக மாற்றமடைகின்றன. குருகுலக் கல்விக்கு பேரரசுகள் மானியம் வழங்குகின்றன. பிராமணர்கள் மட்டுமே பயிலும் குருகுலத்திற்கு மானியம் தடையின்றிக்கிடைக்க அரச (சத்திரியர்) குடும்பத்தினர் மற்றும் வைசியர் (வணிகர்) ஆகியோர் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பக்தி இலக்கியம் தழைத்தோங்கிய ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கர் சன் (சன் என்றால் ஆறு) மதங்களையும் ( காணாபத்யம் - கணபதி வழிபாடு, கௌமாரம் – முருகவழிபாடு, சைவம் – சிவ வழிபாடு, வைணவம் – விஷ்ணு வழிபாடு, சாக்தம் – சக்தி வழிபாடு, சௌரம் – சூரிய வழிபாடு) ஒன்றிணைத்ததின் வாயிலாக இந்து மதத்திற்கான மூல விதை விதைக்கப்பட்டது 17 ஆம் நூற்றாண்டு அரசியலுக்கு அடித்தளமாக இருந்தது. இந்து மன்னர்கள் காலத்தில் மட்டுமல்ல, முகமதியர் காலத்திலும் குலகுருக்களாகவும், மந்திரி பிரதானிகளாகவும், ஆலோசகர்களாகவும் இருந்த அதே சமூக அந்தஸ்தும், மேலாதிக்கமும் கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சியிலும் தொடர்ந்தது.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக மன்னர்களும், குடிகளும் தங்கள் மண்ணுக்காக உயிர்துறக்க பிராமணர்களோ சர், ராவ் பகதூர் பட்டங்களை அலங்கரித்தனர். இதுமட்டுமல்ல ஆங்கிலேயர் ஆட்சியில் 1795-இல் பனரஸ் நகரைச் சேர்ந்த பார்ப்பனர்கள் எந்தக்குற்றம் செய்தாலும் மரண தண்டனை கிடையாது என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை 1817 வரை 22 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வணிகம் செய்வதற்கு வேறு நாட்டு வணிகக்குழுவினர் யாருக்கும் ஆங்கிலேயர்கள் அனுமதியளிக்காத நிலையும், மதப்பிரச்சாரம் செய்வதற்கு கிருஸ்தவ மிஸனரிகளுக்கும் அனுமதியளிக்கப்படாத நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியர்களிடமிருந்து வரிகளை பெற்றுக்கொள்ளும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களுக்கு கல்வியை வழங்க வேண்டுமென்று இங்கிலாந்து பாராளுமன்றம் கட்டளையிட்டது. எனவே 1813 பட்டயச்சட்டப்படி இந்தியாவில் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை பிராமணர்களின் குருகுலமும், முஸ்லீம்களின் மதரசாவும் பெற்றுக்கொண்டன. ஆனால் இதில் ஒரு விநோதமாக மதரசா பள்ளிகளில் முஸ்லீம் அல்லாதவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மதரசாவில் பயிற்றுவிக்கப்பட்ட பாரசீக மொழியை பிராமணர்களும் கற்றுக்கொண்டு நவாப்களின் அறியணையில் திவான், திவான் பகதூர் பட்டங்களைப் பெற்று சுபபோக வாழ்க்கை வாழ்ந்தனர். (பிரம்ம சமாஜத்தை நிறுவிய வங்காள பிராமணர் இராஜாராம் மோகன்ராய் மதரசாவில் பரசீகம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது).