முலாயம் சிங் யாதவ் காலமானார்- சமூகநீதி தூண் சரிந்தது
இந்திய அரசிலில் முக்கியத்தலைவர்களில் ஒருவரானா முலாயம் சிங் யாதவ் (82) வயது முதிர்ச்சியால் எற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலை இயற்கை எய்தினார். உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் கண்காணிப்பில் இருந்துவந்த முலாயம் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1980-களின் பிற்பகுதியில் வி.பி.சிங் காலத்தில் மிக உட்சபட்ச அரசியல் செல்வாக்கில் இருந்த முலாயம் சிங் யாதவ், 1960-ம் ஆண்டுகளில் வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக வீசிய பேரலைகளாக ராம் மனோகர் லோகியா, ஜெய்பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண் உள்ளிட்டோர் இளைஞர் செல்வாக்குடன் வலம் வந்தபோது, இளைஞர் பட்டாளத்தில் லோகியா, ராஜ்நாராயணின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் முலாயம்சிங் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
வட இந்திய சமூகநீதி அரசியலின் மிக முக்கிய தூண்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ், பல்லாயிரம் ஆண்டுகளாக உயர்குடி மக்களால் சுரண்டுப்பட்டு வந்த யாதவ குல மக்களுக்கு விடிவெள்ளியாக இருந்தவர். வழக்கம் போல் வெற்றுபெருமிதத்தை தூண்டி மக்களை புலங்காகிதம் அடையச் செய்யும் அரசியலில், பெரும் இழப்புகளை சந்தித்த நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான யாதவ் சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தை சாத்தியப்படுத்தியவர் முலாயம் சிங் யாதவ்.
உத்திரப்பிரதேச முதல்வராக மூன்று முறையும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றி அனுபவம் வாய்ந்த இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ், சரியான நேரத்தில் தனது மகன் அகிலேஷ் யாதவை அரசியலில் களமிறக்கி முதல்வராகவும் அமர்த்தினார். அகிலேஷ் யாதவ் ஆட்சி மீதான விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், குறுகிய காலத்தில் தவறுகளை திருத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இளம் தலைவர்களில் ஒருவராக உள்ளார். முலாயம்சிங் யாதவ் அரசியல் களத்தில் ஏறியிருக்க வேண்டிய உச்சத்தை நிச்சம் அகிலேஷ் யாதவ் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, முலாயம் சிங் அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த வெற்றி.
சனாதன கருத்துகள் மேலோங்கி வரும் இன்றைய அரசியல் சூழலில், சமூகநீதிக்காக பாடுபட்ட முலாயம்சிங் யாதவ் போன்ற மூத்த தலைவர்களின் இழப்பு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அகிலேஷ் யாதவ் குடும்பத்தினர், சமாஜ்வாடி கட்சியினர் மற்றும் உத்திரப்பிரதேச மக்களுக்கு யாதவ குலத்தோன்றல்களில் ஒன்றான கம்பளத்தார் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.