செஞ்சீனம் சந்தித்த அபினி யுத்தம்!

அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ” அபினி” ஒரு மிக மோசமான போதைப் பொருள் - ஓபியம் காயை கீறுவதால் வடியும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படுவது அபினி…. மிகவும் காஸ்ட்லியான போதை வஸ்து….
அபினி ஒரு மருத்துவப்பொருளாக கிபி 7ம் நூற்றாண்டில் அரேபியர்கள் மூலம் சீனத்திற்குள் அறிமுகமாகிறது. 18ம் நூற்றாண்டின் மத்தியில் வங்கத்தை பிளாசி யுத்தம் மூலம் பெற்ற கிழக்கிந்திய கம்பெனிக்கு சீனா மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. காரணம் தேயிலை, பட்டு மற்றும் பீங்கான் போன்ற சீனப் பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக தேவை இருந்தது. அதேசமயம் மேற்கத்தியப் பொருட்களுக்கு சீனாவில் அதிக தேவை இல்லை. எனவே சீனாவில் இருந்து தேயிலை உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்வதற்கு அதிக வெள்ளி தேவைப்பட்டது.
சீனாவுடனான வர்த்தக சமநிலையை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் செய்த சூழ்ச்சிதான் அபின் விநியோகம். அபினியின் வர்த்தக மதிப்பை உணர்ந்துகொண்ட ஆங்கிலேயர்கள், அதன் பயனை அறுவடை செய்த திட்டம் தீட்டுகின்றனர்.
அன்றைய வங்க மாகாணம் என்பது பீகார், கிழக்கு உபி, ஒரிசா என பரந்து விரிந்த பகுதி. இதனை அபினி பயிரிடும் பகுதியாக மாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்து வந்தது. அதற்காக தான் கைப்பற்றிய வங்காளப் பகுதிகள் துவங்கி சமஸ்தானங்கள் அனைத்திலும் வரி வருவாயை உற்பத்தியை விட அதிகமாக்கி உணவுப் பயிர் விவசாயத்திலிருந்து விவசாயிகளை ஓட வைத்தனர். கட்டாயமாக அவர்களை அபினிக்கு மாற்றினர். இந்தியாவில் விளையும் அபின் சீனாவில் அதிக லாபத்தில் விற்றதன் மூலம் ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக சமநிலையை மேம்படுத்தினர். அதே நேரத்தில் குறைவான உற்பத்தியின் காரணமாக ஏற்கெனவே உபரி குறைவாக இருந்த காரணத்தால் உணவுத் தட்டுப்பாடுகளும், செயற்கை பஞ்சமும் தோன்றின. இது வரலாற்றில் வங்கப்பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.
1780-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 15 டன் அபினி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே, 1813-ம் ஆண்டில் 75 டன்னாக உயர்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் 93 கப்பல்கள் அபினி ஏற்றிச் சென்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன் சபையின் 1782 ஜுலை 7-ம் தேதியிட்ட பதிவில், சீன அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்துத்தான் அபினி விற்பனை நடைபெற்றது என்பதற்காக சான்று இருக்கிறது. காரணம், அன்று சீனாவின் உள்நாட்டிற்கு வியாபாரத்தை ஒரு துறைமுகம் வழியாக மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதித்திருந்தனர்.
அபினி விற்பனையில் 1830-ம் ஆண்டு மட்டும் 34 மில்லியன் டாலர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்து இருக்கிறது. ஆண்டுக்கு 900 டன் அபினி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.
அபினி கடத்தலுக்கு உதவி செய்ய துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் பல்வேறு குழுக்களாக உருவாக்கப்பட்டன. இதுதான், ஆசிய நாடுகளில் இன்று புகழ்பெற்றுள்ள மாஃபியா என்ற தொழில்முறைக் கடத்தல்காரர்கள் உருவானதின் முதல் புள்ளி. அப்போது, சீனாவில் குவிங் வம்சப் பேரரசு ஆட்சி செய்துவந்தது. பிரிட்டிஷ்காரர்களின் அபினி வணிகத்தால் சீனாவுக்குள் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுகிறது என்று உணர்ந்த குவிங் பேரரசு, அபினி இறக்குமதிக்குத் தடை விதித்தது.
இந்த உத்தரவால், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், சீன அரசாங்கத்தின் தலைமை பெய்ஜிங்கில் இருந்தது. கடத்தல் நடக்கும் துறைமுகங்களை அவர்களால் நேரடியாகக் கண்காணிக்க முடியவில்லை. மேலும், பணத்தாசை காரணமாக சீன அதிகாரிகள் பலரும் கடத்தலுக்கு துணை நின்றனர். அப்போது, குவண்டோன் பகுதியின் சிறப்பு ஆளுனராக லின் சே சூ என்பவர் பொறுப்பு ஏற்றார்.
இவர், சீனாவுக்குள் சட்ட விரோதமாக நடந்த போதைப் பொருள் இறக்குமதியை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அத்துடன், சீனாவுக்குள் பிரிட்டிஷ் கம்பெனி அபினி இறக்குமதி செய்வதை உடனே நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதம் மகாராணி கைக்கு சென்று சேரவே இல்லை.
கடத்தல் விவகாரத்தில் சீன அரசின் உத்தரவுகள், விதிமுறைகள் எதையும் பிரிட்டன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், லின் சே சூ ஆத்திரம் அடைந்தார். இவர் முன்னதாக, ஹுனான் பகுதியின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தேர்ந்த அறிவாளி மற்றும் தைரியசாலி. ஆகவே, சீனாவின் தெற்குக் கடல் பகுதி முழுவதும் அபினி கடத்தல்காரர்கள் வசமாவதை ஒடுக்குவதற்கு கமிஷனர் லின் கடும் நடவடிக்கையைத் தொடங்கினார்.
துறைமுகப் பகுதியில் எங்கெல்லாம் அபினி பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று அவற்றை அழிக்கத் தொடங்கினார்.இந்த அதிரடி நடவடிக்கையில் 1,700 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 70,000 ஓபியக் குடுவைகள் அழிக்கப்பட்டன. 23 நாட்களில் 500 அரசாங்க வீரர்கள் ஒன்று சேர்ந்து 1.2 மில்லியன் கிலோ அபினியை அழித்தனர். கடத்தல்காரர்கள் பொது இடத்தில் தூக்கில் போடப்பட்டனர். காவல் படகுகள் துறைமுகத்தில் இரவு பகலாக ரோந்து சென்று கண்காணித்தன.
இந்தக் கெடுபிடி, பிரிட்டிஷின் அபினி வணிகத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனி 6 போர்க் கப்பல்களையும் 7,000 பேர் கொண்ட படைகளையும் கொண்டு, 1839-ல் சீனாவைத் தாக்கத் தொடங்கியது. அந்தப் போர், ‘அபினி யுத்தம்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் போதைப் பொருள் வணிகத்துக்காக நடந்த முதல் போர் இதுவே!
இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் முடிவு, பிரிட்டிஷாருக்கு சாதகமாக அமைந்தது. பிரிட்டிஷ் படைகள், ஹாங்காங் தீவுகளைக் கைப்பற்றின. இதன் விளைவாக, ஒரு தலைப்பட்சமாக தயாரிக்கப்பட்ட நான்கிங் என்ற ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்துப் போட்டு ஹாங்காங்கை பிரிட்டனின் காலனி நாடாக விட்டுக் கொடுத்தது. கூடவே, ஆண்டுக்கு 15 மில்லியன் வெள்ளிப் பணமும் கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டது. மேலும் முன்னர் ஒரே ஒரு துறைமுகத்தில் (கேன்டன்) மட்டுமே வர்த்தகம் செய்து வசிக்க அனுமதிக்கப்பட்ட பிரிட்டிஷ் வணிகர்கள், இப்போது ஐந்து "ஒப்பந்த துறைமுகங்களில்" அனுமதிக்கப்பட்டனர்.
அதன் மூலம், விரிவான அபினி சந்தை ஒன்றை பிரிட்டிஷ் கம்பெனி ஆசிய நாடுகளில் உருவாக்கியது.
அதே நேரம், இந்திய சமஸ்தானங்கள் பலர் தாமே நேரடியாக அபினி வணிகத்தில் ஈடுபட முயற்சிப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அதை ஒடுக்க லைசென்ஸ் முறையை அறிமுகம் செய்தது. அதன்படி, உரிமை பெற்றவர்கள் மட்டுமே அபினி விளைவிக்க முடியும், அத்துடன், அபினி விவசாயிகள் அதை வேறு யாரிடமும் விற்க முடியாதபடி தந்திரமும் மேற்கொண்டது.
ஒரு பக்கம் சீனாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தி தனது வருவாயைப் பெருக்கிக்கொண்டது என்றால், மறு பக்கம் தனது காலனிய ஆட்சியில் இருந்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தேயிலையை அறிமுகம் செய்து தங்களுக்கான தேயிலைத் தேவையை தாங்களே உற்பத்தி செய்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்த தேயிலைத் தோட்டப் பணிக்காக கொத்தடிமைகளாக பல ஆயிரம் பேர் வேலைக்கு சென்று குளிர் தாங்காமலும், நோய் ஏற்பட்டும் செத்து மடிந்தது தனிக் கதை.
அக்டோபர் 1856 இல், சீன சுங்கப் போலீசார் பேர்ல் நதியில் நங்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கப்பலான 'ஆரோ'வைக் கைப்பற்றினர், அதன் குழுவினரை கடற்கொள்ளையர்கள் என்று குற்றம் சாட்டினர் . அந்தக் கப்பல் சீனர்களுக்குச் சொந்தமானது. பணியாளர்கள் அனைவரும் சீனர்களாக இருந்தபோதிலும், 'ஆரோ' பிரிட்டிஷ் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்டது. இதுவே இரண்டாம் அபினி யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.
'ஆரோ' சம்பவத்திற்குப் பிறகு , பிரிட்டிஷ் தூதர் ஹாரி பார்க்ஸ், கேன்டனுக்குச் செல்லும் வழியில் ஒரு பிரிட்டிஷ் கடற்படையை 'பேர்ல் நதி' முகத்துவாரத்திற்கு அனுப்பினார். பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் இந்தப்படையுடன் இணைந்தனர். 1857 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஆங்கிலோ-பிரெஞ்சுப் படை கேன்டனை ஆக்கிரமித்தது.
மே 1858 இல் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களில் இருந்த நேச நாட்டுப் படைகள் தியான்ஜினை (டைன்சின்) அடைந்து சீனர்களை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தின.
1858 ஆம் ஆண்டில், தியான்ஜினின் நான்கு ஒப்பந்தங்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தின, மேற்கத்திய வர்த்தகத்திற்கு புதிய துறைமுகங்களைத் திறந்தன, வெளிநாட்டு தூதர்கள் பெய்ஜிங்கில் வசிக்க அனுமதித்தன, கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு சுதந்திரமான நடமாட்டத்தை அளித்தன, மேலும் உட்புறத்தில் பயணிக்க அனுமதித்தன. அந்த ஆண்டு மேலும் பேச்சுவார்த்தைகள் அபின் இறக்குமதியை சட்டப்பூர்வமாக்கின.
ஜூன் 1859 இல், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் ஒப்பந்தங்களை அங்கீகரிக்க பெய்ஜிங்கை அடைய முயன்றனர். இருப்பினும், டாகுவில் கடற்படை தடுக்கப்பட்டு, பெரும் உயிரிழப்புகளுடன் திருப்பி அனுப்பப்பட்டது, மேலும் சீனர்கள் ஒப்பந்தங்களை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர்.
நேச நாடுகள் மீண்டும் பகைமையைத் தொடங்கின. அக்டோபர் 1860 இல், கணிசமான அளவு பெரிய போர்க்கப்பல்களும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு துருப்புக்களும் பெய்ஜிங்கைக் கைப்பற்றி, பேரரசரின் கோடைக்கால அரண்மனையான யுவான்மிங் தோட்டத்தை சூறையாடி, பின்னர் எரித்தன.
அதைத் தொடர்ந்து சீனர்கள் பெய்ஜிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், அதில் அவர்கள் தியான்ஜின் ஒப்பந்தங்களைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டனர். மேலும், ஹாங்காங்கை ஒட்டிய கவுலூன் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியையும் பிரிட்டிஷாரிடம் விட்டுக்கொடுத்தனர்.
ஓபியம் போர்கள் சீனாவை மேற்கத்திய வர்த்தகம் மற்றும் செல்வாக்கிற்குத் திறந்தன, ஆனால் கிங் வம்சத்தின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் வெகுவாகக் குறைத்தன. 1911/12 இல் அது தூக்கியெறியப்படும் வரை இந்த வம்சம் இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.