நகர்ப்புற உள்ளாட்சியில் எதிர்நீச்சல்! - வெற்றிச்செல்வியாக தமிழ்ச்செல்வி
திருமதி.தமிழ்ச்செல்வி.B.Tech அவர்கள் 14.11.1990-இல் திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமத்தில் திரு.ராஜு - திருமதி.ஜெயமணி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். விவசாயத்தோடு பனியன் உற்பத்தி தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். திருமதி.தமிழ்ச்செல்வி ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்விவரை திருப்பூரிலும் அதன்பின் அங்குள்ள ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் இளைங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். திரு.P.முத்துக்கிருஷ்ணன் அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதிக்கு M.யோகித் பிரணவ் என்ற மகனும் M.யக்ஷினி என்ற மகளும் உள்ளனர்.
திரு.முத்துக்கிருஷ்ணன் B.Com,B.L., அவர்கள் 6.12.1982-இல் திருப்பூர் மாவட்டம், தொட்டிய மண்ணரையிலுள்ள சத்யாகாலணியில் திரு.பொன்னுச்சாமி-திருமதி.சாந்தாமணி தம்பதியினருக்கு அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். திருப்பூர் அருகேயுள்ள காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டமும், சேலத்திலுள்ள மத்திய சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டமும் முடித்துள்ளார்.
திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் குடும்பம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி 1972-இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதிலிருந்து இன்றுவரை சுமார் 50 ஆண்டுகாலமாக அதிமுக-வின் தீவிர விசுவாசமிக்க குடும்பமாக உள்ளது என்றால் மிகையல்ல. இவரின் தந்தையார் தெய்வத்திரு. பொன்னுச்சாமி அவர்கள் அதிமுக-வில் கிளைக்கழக செயலாளர், ஊராட்சி செயலாளர், மாவட்டப்பிரதிநிதி போன்ற பொறுப்புகளை வகித்தவர். 1986,1996,2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தொட்டிய மண்ணரை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 15 ஆண்டுகாலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தெய்வத்திரு.பொன்னுச்சாமி.
தந்தையார் வழியைப் பின்பற்றி சிறுவயது முதலே அதிமுக-வில் பயணிப்பவரான திரு.முத்துக்கிருஷ்ணன் ஒன்றிய மாணவரணிச் செயலாளராக பணியாற்றியவர், கடந்த இரண்டு வருடங்களாக (2020 முதல்) பகுதிக்கழக துணைச்செயலாளராக இருந்து வருகிறார். விவசாயமும், PMV என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நடத்தி வருகின்றார்.
2009-இல் திருப்பூர் மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் தரம் உயர்ந்த பின்னர் தொட்டிய மண்ணரை ஊராட்சி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. அதற்குப்பின் 2011-இல் முதல்முறையாக நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக-வில் இவரது தந்தையார் பொன்னுச்சாமி அவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் 2014-இல் தந்தையார் காலமானார். இதனையடுத்து 2016-இல் நடைபெற வேண்டிய தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
தற்பொழுது கடந்த பிப்ரவரி'19-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை தனது துணைவியார் திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களுக்கு பெற்றார் திரு.முத்துக்கிருஷ்ணன்.
எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கி கடுமையான சவாலை எதிர்கொண்டு தீவிர களப்பணியாற்றி மாநில முழுவதும் ஆளும்கட்சி பிரமாண்ட வெற்றிபெற்ற நிலையில் திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை மகத்தான வெற்றிபெற வைத்தார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிகார பலம் கொண்ட ஆளும்கட்சி வேட்பாளரை வென்று கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளனர் திரு& திருமதி.முத்துக்கிருஷ்ணன் தம்பதியினர். மிக இளைய வயதில் கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி வாய்ப்பளித்த மக்களுக்கு சாதி, மத வேறுபாடின்றி "மக்களால் நான்- மக்களுக்காக நான்" என்ற புரட்சித்தலைவியின் பொன்மொழிகளுக்கேற்ப பணியாற்றி அரசியலில் மேலும் பல உயரங்களைத் தொட அன்புடன் வாழ்த்துகிறோம்.