நகர்ப்புற உள்ளாட்சியில் பேரூராட்சி துணைத்தலைவர்!
திரு.P.வேலுச்சாமி அவர்கள் 15.06.1986-இல் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள தொட்டியபட்டி கிராமத்தில் திரு.பழனிச்சாமி - திருமதி.லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். மின்னனு தகவல் தொழில்நுட்பவியலில் பட்டயப்படிப்பும், வணிக நிர்வாகத்தில் இளநிலை பட்டமும் பெற்றுள்ள திரு.வேலுச்சாமிக்கு திருமதி.தேன்மொழி என்ற மனைவியும், V.மோனிகாஸ்ரீ என்ற மகளும் V.சாய்சரண் என்ற மகனும் உள்ளனர்.
கல்லூரி படிப்பிற்குப்பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வந்த திரு.வேலுச்சாமி 2005-இல் அதிமுக-வில் இணைந்து கிளைக்கழக செயலாளராக பணியாற்றியுள்ளார். அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப்பின் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தின் காரணமாக திரு.டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியைத் தொடங்கியபொழுது அதில் இணைந்து பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளராக நியமனம் பெற்றார். கரூர் மாவட்ட அரசியலில் அசைக்கமுடியாத ஆளுமையான அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தீவிர ஆதரவாளரான திரு.வேலுச்சாமி, அவர் அமமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தபொழுது இவரும் திமுக-வில் ஐக்கியமானார்.
2016-இல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித்தேர்தலில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் களமிறங்கியவர், தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி'19 இல் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். இதனையடுத்து நடந்த மறைமுகத் தேர்தலில் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் ஆசியோடு பேரூராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் வளர்ந்துவரும் இளைய தலைமுறை தலைவர்களில் ஒருவரான திரு.வேலுச்சாமி அரசியலுக்குத் தேவையான நிதானத்தோடும், நெழிவு சுழிவுகளோடும் பயணித்து மேலும் பல உயரங்களைத் தொட்டு வளர வாழ்த்துகிறோம்.