தை திருநாள்- தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
முதலாளித்துவ வர்த்தக உலகில் பற்பல தொழில்கள் இருந்தாலும் ஆதி குடிகளின் முதல் தொழில் விவசாயம். மனித குலம் உணவுக்கு மாற்றாக வேறு ஏற்பாடுகள் செய்யும் வரை உழவைச் சுற்றியே உலகம் சுழலும். ஜாதி, மத பாகுபாடற்ற தமிழன் உழவுத்தொழிலின் சிறப்பையும், மாண்பையும் போற்றும் விதமாகவும், இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாகவும் அறுவடைக்குப்பின் இளவேனில் காலத்தின் தொடக்கத்தை தமிழர் புத்தாண்டாக தைத்திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, புறநானூறு என தமிழர் இலக்கியங்களில் உழவின் உன்னதத்தை குறிப்பிடாமல் நிறைவு பெறுவதில்லை என்பதிலிருந்தே இத்திருநாள் மக்களோடு பிணைந்திருப்பதை காணலாம். தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வார்த்தெடுத்த இத்திருநாளை மக்கள் சாதி,மத, இன,மொழி அடையாளங்களை கடந்து காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில், தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். தெலுங்கு மொழி பேசும் மக்கள் இந்நாளை மகாசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.
கம்பளத்தார் சமுதாயத்தில் இன்னும் பெரும்பான்மை மக்களின் தொழிலாக இருப்பது விவசாயமே. இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே விவசாயத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விடுவித்துக் கொண்டாலும் இன்றைய இளம் தலைமுறையின் கவனம் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் உழவைச் சுற்றியே உலகம் சுழலும் என்பதை மெய்ப்பிக்கிறது.
தை பிறந்தாள் வழி பிறக்கும் என்ற முதுமொழியை மெய்பிக்கும் வகையில் இன்று பிறக்கும் தை மகள் கம்பளத்தார்களின் வலி போக்கி நல்வழி காட்டிட துணைபுரிவாள் என்று நம்புவோம்.
அனைவருக்கும் இனிய தை திருநாள்,தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.