இரண்டாவது முறையாக சாதித்த கட்டபொம்மன் அகாடமி மாணவி கனகா!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்-சென்னை சார்பில் நடத்தப்பட்டு வரும் கட்டபொம்மன் அகாடமி மாணவி பி.கனகா, இரண்டாவது முறையாக குரூப் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசுப்பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.பெருமாள். ஆடு, மாடு வியாபாரம் செய்துவரும் பெருமாள் அவர்களின் மகளான பி.கனகா, திரு.சிவப்பெருமாள் என்பவரை மணமுடித்து, இத்தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் 2023-இல் கொண்டாடப்பட்ட முப்பெரும்விழாவில் தொடங்கப்பட்ட கட்டபொம்மன் அகாடமி-யில் முதலாமாண்டு மாணவியாகச் சேர்ந்தார் பி.கனகா. இவருக்கும் இவருடன் சேர்ந்தவர்களுக்கும் கட்டபொம்மன் அகாடமி-யின் உதவியோடு சென்னையிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் குரூப் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்4 மற்றும் குரூப்2ஏ முதன்மைத்தேர்வில் வெற்றிபெற்றிருந்தார் கனகா.
குரூப்4 தேர்ச்சி அடிப்படையில் வனத்துறைப் பாதுகாவலர் (Forest Gaurd) பணிக்கான பட்டியலில் கனகா இடம்பிடித்தார். ஆனால் அதில் விருப்பமில்லாத கனகா, மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்4 தேர்வில் பங்கேற்று கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து 09.12.2025, செவ்வாய் அன்று நடைபெற்ற கலந்தாய்வில் *பில் கலெக்டர் பணி*க்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவைப்பெற்றுக்கொண்ட கனகா-வுக்கு சேலம் மாவட்டத்திலுள்ள பேரூராட்சியில் பில் கலெக்டர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனகா விரைவில் பில் கலெக்டர் ஆக பொறுப்பேற்கவுள்ளார்.
இரண்டாவது முறையாக குரூப்4 தேர்வில் வெற்றிபெற்று, தான் விரும்பும் துறைக்குத் தேர்வாகியுள்ள பி.கனகா-வுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், கட்டபொம்மன் அகாடமி தேர்வுக்குழுத் தலைவர் பி.இராமராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, தேர்வுக்குழு உறுப்பினரும், அமைப்புச்செயலாள்ருமான ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

