மாமன்னர் திருமலை நாயக்கரின் 438-வது ஜெயந்தி! - மதுரையில் கோலாகல கொண்டாட்டம்!
1371 முதல் மதுரையில் அமைந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்களின் தொடர்ச்சியாக கிபி 1623 முதல் 1629 வரை மதுரை ஆட்சி செய்தவர் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்கள். அவரின் சிறப்பான பணிகளாலும், நிர்வாகத்திறமையாலும் போற்றப்பட்டு வருபவர் மாமன்னர் திருமலை நாயக்கர். அவரின் 438-வது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பிலும், பல்வேறு தெலுங்கு அமைப்புகள் சார்பிலும் கொண்டாடப்படுகிறது.
இராஜகம்பளத்தார் சமுதாய அமைப்பான விடுதலைக்களம் சார்பில் மதுரையில் உள்ள மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் திரு.இராமமோகன்ராவ் அவர்களும், நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல், தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளும் அதன் நிறுவனத்தலைவர் திரு.இரவி நாயக்கர் அவர்கள் கழகத்தின் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் திரு.சி.எம்.கே.ரெட்டி அவர்களும், பொதுச்செயலாளர் நாயக்கர் திரு.நந்தகோபால் அவர்களும் மதுரையில் உள்ள மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.